டெல்லி

பாஜக மூத்த தலைவர் எல் கே அத்வானியை நேரில் சந்தித்து மோடி வாழ்த்து பெற்றுள்ளார்.

நாடெங்கும் உள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வாக்குகள் கடந்த 4ம் தேதி எண்ணப்பட்டன. ஆட்சியமைக்க 272 தொகுதிகளை கைப்பற்றவேண்டிய நிலையில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது.

பா.ஜ.க. 240 தொகுதிகளை கைப்பற்றியது. மேலும் கூட்டணியில் இடம்பெற்றிருந்த தெலுங்கு தேசம் 16 தொகுதிகளையும், ஐக்கிய ஜனதாதளம் 12 தொகுதிகளையும் கைப்பற்றின. பா.ஜ.க.வுக்கு தனி மெஜாரிட்டிஇல்லை என்பதால் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து பா.ஜ.க. ஆட்சி அமைக்கிறது.

இன்று தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள், கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் பழைய நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் மோடி தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்ற குழு தலைவராக ஒருமனதாக தேர்வுசெய்யப்பட்டார்..

இதையொட்டி பாரத ரத்னா விருதை பெற்றவரும், பா.ஜ.க.வின் முன்னாள் தலைவருமான எல்.கே. அத்வானியை அவரது வீட்டில் சந்தித்து மோடி வாழ்ந்து பெற்றார்.பிறகு அவர் முரளி மனோகர் ஜோஷியையும், முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தையும் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.