மதுரை: தமிழ்நாடு காவல்துறை சகட்டுமேனிக்கு பலர்மீது  குண்டாஸ் போடப்பட்டுள்ளதும், அதுதொடர்பான ஆவணங்களை முறையாக வழங்காததையும் கண்டித்த உயர்நீதிமன்றம் மதுரை கிளை, இதுதொடர்பாக  தென்மண்டல ஐஜி, உள்துறை இணைச்செயலாளர் ஆஜராக உத்தரவிட்டு உள்ளது.

சமீப காலமாக எதற்கெடுத்தாலும் குண்டாஸ் சட்டத்தில் காவல்துறை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருவது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது. இதுபோன்ற குண்டாஸ் சட்டங்கள் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்படுவதும் தொடர்கதையாகி வருகின்றன. இதுதொடர்பான விசாரணையின்போது தமிழ்நாடு காவல்துறையை நீதிபதிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில் குண்டாஸ் சட்டத்தில் கைது செய்யப்படுவர்கள் தொடர்பாக முறையான ஆவணங்கள் வழங்காததால்,  தென்மண்டல ஐஜி  நீதிமன்றத்தில் ஆஜராக  மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது.

குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்படுவோருக்கு ஆவணங்களின் தமிழ் நகல் உரிய காலத்தில் வழங்கப்படாமல் இருப்பதால் அதிகளவில் குண்டர் தடுப்புக் காவல் உத்தரவுகள் ரத்து செய்யப்படுகின்றன என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு  காவல்துறை மற்றும் தமிழ்நாடு அரசுமீது அதிருப்தி தெரிவித்துள்ளது.

உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஜெ.சத்தியநாராயண பிரசாத் அமர்வு குண்டர் தடுப்பு சட்ட காவல் உத்தரவுகளை ரத்து செய்யக் கோரும் ஆட்கொணர்வு மனுக்களை விசாரித்து வருகிறது.  இந்த வழக்கு தொடர்பான விசாரணையின்போது,  நீதிபதிகள், “குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்படும் குற்றவாளிகளுக்கு, குண்டர் தடுப்புச் சட்ட காவல் உத்தரவு தொடர்பான ஆவணங்களின் தமிழ் நகல் உரிய காலத்தில் வழங்க வேண்டும் என சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

அதுபோல,  குண்டர் தடுப்புச் சட்ட காவல் உத்தரவுகளை எதிர்த்து மேல்முறையீடு செய்ய குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு உரிமை உள்ளது.

இவ்வாறு தாக்கல் செய்யப்படும் மேல்முறையீடு மனுக்களின் விசாரணையின் போது, குண்டர் தடுப்பு சட்ட காவல் உத்தரவின் தமிழ் நகல் கைது செய்யப்பட்ட வர்களுக்கு குறிப்பிட்ட காலத்துக்குள் வழங்க வேண்டும் என பலமுறை நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது, உத்தரவும் பிறப்பித்துள்ளது.

ஆனால், நீதிமன்ற உத்தரவுகளை காவல்துறையினர் முறையாக செயல்படுத்துவது இல்லை. உரிய நேரத்தில் தமிழ் நகல் வழங்கப்படாத காரணததால் ஏராளமான குண்டர் தடுப்புச் சட்ட காவல் உத்தரவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

எனவே, உயர் நீதிமன்ற மதுரை அமர்வு பதிவாளர்,  சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி முன்பாக இந்த விவகாரத்தை கொண்டு செல்ல வேண்டும். இது தொடர்பாக உரிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க தமிழக உள்துறை துணைச்செயலாளர், தென்மண்டல காவல்துறை தலைவர் ஆகியோர் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் நேரில் ஆஜராக வேண்டும்” என உத்தரவிட்டுள்ளனர்.

குண்டாஸ் சட்டத்தை தமிழ்நாடு அரசும், காவல்துறையும் எப்படி சாதாரணமாக பயன்படுத்துகிறது? சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் கண்டனம்…