சென்னை: கடந்த அதிமுக  ஆட்சியில் தற்போதைய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட அவதூறு வழக்கை தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது.

கடந்த  2011ஆம் ஆண்டு அப்போதை தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து  திருவாரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில், அவதூறாக பேசியதாக அதிமுக நகர செயலாளர் தட்சிணாமூர்த்தி என்பவர் கொடுத்த புகாரின் பேரில் அமைச்சர் பொன்முடி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் 2015ஆம் ஆண்டு பொன்முடி வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதற்கிடையில் திமுக ஆட்சிக்கு வந்ததும், அப்போது, கடந்த அதிமுக ஆட்சியின்போது எதிர்க்கட்சிகள், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் மீது போட்டிருந்த அவதூறு வழக்குகளை வாபஸ் பெறுவதாக அறிவித்தது.

இந்த நிலையில் பொன்முடி மீதான அவதூறு வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திராமுன்பு,  பொன்முடி மீதான வழக்கையும் ரத்து செய்ய வேண்டும் அரசு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். இதை ஏற்று பொன்முடி மீதான அவதுற வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.