சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் பெரியாசாமி, ரூ.800 கோடியில் உயர் மட்ட பாலங்கள் உள்பட 20 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். மேலும், முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 2,25,000 கலைஞர் கனவு இல்லங்கள் கட்டி முடிக்கப்பட்டிருக்கும் என்றும் கூறினார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில், பட்ஜெட் மீதான விவாதங்கள் முடிவடைந்து, துறை வாரியாக மானிய கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மானிய கோரிக்கையில் அமைச்சர் இ.பெரியசாமி 20 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதன் விவரம் வருமாறு:-
- 500 ஊராட்சி அலுவலகக் கட்டடங்கள் ரூ.157 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படும்.
- ஊரகப் பகுதிகளில் 500 அங்கன்வாடி மையங்களுக்கு புதிய கட்டங்கள் ரூ.87 கோடியில் கட்டப்படும்.
- ஊரகப் பகுதிகளில் 500 முழுநேர நியாயவிலைக்கடைகள் ரூ.61 கோடியில் கட்டப்படும்.
- தமிழ்நாடு அரசின் ’பசுமை தமிழ்நாடு இயக்கத்தை’ முன்னெடுத்து செல்லும் வகையில் ரூ.1 கோடி மரக்கன்றுகள் நடப்படும்.
- ஊரகப் பகுதிகளில் 500 அரசு பள்ளிகளில் ரூ.50 கோடி மதிப்பீட்டில் சுற்றுசுவர் கட்டப்படும்.
- இயற்கை மற்றும் நீர் வள பணிகள் ரூ.500 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
- ஊரகப் பகுதிகளில் உள்ள மண் சாலைகள் ரூ.150 கோடி மதிப்பீட்டில் ஓரடுக்கு கம்பி சாலைகளாக தரம் உயர்த்தப்படும்.
- தெருக்கள் மற்றும் சந்துக்களை மேம்படுத்தும் பணிகள் ரூ.350 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
- குழந்தை நேய வகுப்பறைகள் 182 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
- பள்ளிகளில் பழுது பார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் ரூ.60 கோடியில் மேற்கொள்ளப்படும்.
- ரூ.800 கோடியில் உயர் மட்ட பாலங்கள் அமைக்கப்படும்.
- ரூ.300 கோடி மதிப்பீட்டில் 1200 புதிய மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகள் கட்டப்படும்.
- நகர்புறத்தை ஒட்டியுள்ள 690 ஊராட்சிகளுக்கு சிறப்பு நிதியாக ரூ.69 கோடி வழங்கப்படும்.
- 278 மலைக்கிராம ஊராட்சிகளுக்கு சிறப்பு நிதியாக ரூ.30 கோடி வழங்கப்படும்.
- வன உரிமைச் சட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் கிராம ஊராட்சிகளுக்கு ரூ.10 கோடி சிறப்பு நிதி வழங்கப்படும்.
- துப்புரவுப் பணியாளர்களின் நலப்பணிகளுக்காக துப்புரவு தொழிலாளர்கள் நலவாரியத்திற்கு ரூ.5 கோடி வழங்கப்படும்.
- 10 ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டங்கள் ரூ.59 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
- நமக்கு நாமே திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு ரூ.150 கோடியாக உயர்த்தப்படும்.
- ஊராட்சித்துறையின் மூலம் கட்டப்பட்டுள்ள அலுவலக மற்றும் பொது பயன்பாட்டு கட்டடங்களை பராமரிக்க விரிவான பராமரிப்பு கொள்கை வகுக்கப்படும்.
- பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கிராமப்புரங்களில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் 1500 சுமதாய சுகாதார வாளங்கள் ரூ.31.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.