டெல்லி: பயங்கரவாதிகளை ஒழிப்பது தொடர்பாக முப்படை தளபதிகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான மத்திய அமைச்சரவை ஆலோசனை கூட்டங்களைத் தொடர்ந்து இந்திய எல்லையில் படைகள் ராணுவ துருப்புகள் குவிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், எந்த நேரமும் பாகிஸ்தான்மீத தாக்குதல் நடத்தப்படலாம் என அஞ்சப்படுகிறது. இதனால் பாகிஸ்தான் மக்கள் பீதியில்உள்ளனர்.

கடந்த 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உள்பட 28 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவம், அந்த நாட்டு உளவுத் துறைக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, பஹல்காம் தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை விடுத்திருந்தார். இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது.
இதற்கிடையில், பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு தொடர்பான மத்திய அமைச்சரவை (சிசிஎஸ்) கூட்டம் கடந்த ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் உடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பது, விசா நிறுத்தம் உள்ளிட்ட சில முடிவுகள் எடுக்கப்பட்டன. இதையடுத்து, சிம்லா ஒப்பந்தம் ரத்து உள்ளிட்ட சில நடவடிக்கைகளை பாகிஸ்தான் எடுத்தது. இதனால் மேலும் பதற்றம் ஏற்பட்டு ள்ளது. இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேற்றப்பட்ட நிலையில், அங்கிருந்தும் இந்தியர்கள் வெளியேற்றப்பட்டனர்.
இந்த சூழலில், பிரதமர் மோடி தலைமையில் நேற்று முன்தினம் (ஏப்ரல் 29ந்தேதி) உயர்நிலை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான், ராணுவ தளபதி உபேந்திர திவிவேதி, கடற்படை தளபதி தினேஷ் கே திரிபாதி, விமானப்படை தளபதி அமர் பிரீத் சிங் ஆகியோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில், பஹல்காம் தாக்குதலில் தொடர்புடையவர்களுக்கு தக்க பதிலடி கொடுப்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. எந்த இடங்களில், எவ்வாறு தாக்குதல் நடத்துவது என்பது குறித்து முடிவு எடுக்கும் அதிகாரம் முப்படைகளுக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து, இரண்டாவது முறையாக பாதுகாப்பு தொடர்பான மத்திய அமைச்சரவை (சிசிஎஸ்) கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று (ஏப்ரல் 30ந்தேதி ) அன்று மீண்டும் நடைபெற்றது.
இதில் பஹல்காம் தாக்குதலில் தொடர்புடையவர்களுக்கு பதிலடி கொடுப்பது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் தாக்குதல் தொடர்பாக இந்திய ராணுவத்துக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில், இந்திய எல்லையில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவை தயார் நிலையில் உள்ளன. இதனால் இரு நாடுகளுக்கிடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்தியா எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என பாகிஸ்தானியர்கள் கருதுகின்றனர். இதனால் அந்நாட்டில் பதற்றம் நிலவுகிறது.