சென்னை: மருத்துவ படிப்பில்  சேர்ந்து மருத்துவம் படித்து வரும் மாணவர்கள்  படிப்பில் இருந்து விலகினால் ரூ.10 லட்சம் அபராதம் செலுத்த நேரிடும் என மருத்துவக்கல்வி இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களை பெற்று அனுமதிக்கப்பட்ட காலவரையறைக்கு இடையில்  விலகினால் ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 9,050 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. அதே போல் மொத்தம் 2,200 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. நடப்பாண்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைகான விண்ணப்பதிவு ஜூலை 31 தொடங்கி ஆகஸ்ட் 9ஆம் தேதி முடிவடைந்தது.

தொடர்ந்து ஆக.21ஆம் தேதி முதல் கலந்தாய்வு நடைப்பெற்றது. எம்பிபிஎஸ் படிப்புகளுக்கான முதல்சுற்று கலந்தாய்வு முடிந்த போது 1423 காலி இடங்களும், பிடிஎஸ் படிப்பில் 1566 இடங்களும் காலியாக இருந்தன. அதன் பின்னர் 2ம் கட்ட கலந்தாய்வு அறிவிக்கப்பட்டு கடந்த 14ம் தேதி தொடங்கியது. இந்த கலந்தாய்வு நேற்றுடன் முடிவடைய, நாளை தரவரிசை பட்டியல் வெளியிடப்படவுள்ளது.

தொடர்ந்து மாணவர்கள் வரும் 26ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் சென்று சேர்ந்து கொள்ள வேண்டும். விருப்பம் இல்லாதவர்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கல்லூரியில் இருந்து அபராதம் இன்றி வெளியேறிவிடலாம் என மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

மேலும் கால இடைவெளி முடிந்த பின்னர் படிப்பை பாதியில் கைவிட்டால் ரூ.10 லட்சம் அபராதம், வைப்புத் தொகை, கல்விக்கட்டணம் ஆகியவை செலுத்த வேண்டும் என்று மருத்துவ கல்வி இயக்கக அதிகாரிகள் கூறி உள்ளனர்.

இதுகுறித்து கூறிய அதிகாரிகள்,  இரண்டாம் சுற்று கலந்தாய்வில் இடங்கள் பெற்றவர்கள் படிப்பை தொடர விரும்பாவிட்டால், ஓரிரு நாள்கள் அவகாசம் வழங்கப்படும். அதற்குள் கல்லூரியிலிருந்து விலகினால் அபராதம் ஏதும் இல்லை. அதேவேளையில், அதன் பின்னர் படிப்பை கைவிடும் மாணவர்களுக்கு அபராதம் வசூலிக்கப்படும்.

இதே போல, மூன்றாம் சுற்று மற்றும் இறுதி சுற்று கலந்தாய்விலும் இடங்கள் பெற்று படிப்பை கைவிடுபவர்களிடம் அபராதம் வசூலிப்பதுடன், கல்வித்தொகை மற்றும் வைப்புத் தொகை திருப்பி தரப்பட மாட்டாது. எனவே, மாணவர்கள் இடங்கள் தேர்வு செய்யும் போது கவனமாக செயல்பட வேண்டும்.

மாணவர்கள் படிப்பை கைவிடுவதால், கல்லூரிகளில் ஏற்படும் காலி இடங்களை குறைப்பதற்காக இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறது” எனத் தெரிவித்தனர்.