சென்னை: மதிமுகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த மல்லை சத்யா, மதிமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கம் செய்யப்படுவதாக மதிமுக பொதுச்செயலர் வைகோ அறிவித்துள்ளார்.

வைகோ மகன் துரை வைகோவுக்கும், கட்சியின் மூத்த தலைவரான மல்லை சத்யாவுக்கும் இடையே ஏற்பட்ட நெருடல் காரணமாக கட்சிக்குள் சலசலப்பு எழுந்தது. தனது மகனுக்கு ஆதரவாக வைகோ செயல்படுவதாக புகார்கள் எழுந்தன. இதன் காரணமாக, விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு மாத்தையா துரோகம் செய்ததை போல், மல்லை சத்யா தனது துரோகம் செய்துவிட்டதாக வைகோ அண்மையில் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்த மல்லை சத்யா, தன்னை துரோகி எனக் கூறியதற்கு பதிலாக விஷம் கொடுத்திருந்தால் குடித்துவிட்டு இறந்திருப்பேன் எனத் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, மல்லை சத்யாவை சஸ்பெண்ட் செய்து வைகோ அறிவித்திருந்தார். மேலும், மல்லை சத்யா விளக்கம் அளிக்கும்படியும் அவரது நோட்டிசில் கூறப்பட்டிருந்தது. அதன்படி மல்லை சத்யா மல்லை சத்யா வைகோ அளித்த 15 நாள்களுக்குள் எழுத்துப்பூர்வமாக கடந்த வாரம் விளக்க கடிதம் அனுப்பியிருந்தார்.
இந்த நிலையில் மல்லை சத்யாவை கட்சியில் மதிமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்குவதாக அக்கட்சியின் பொதுச்செயலர் வைகோ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், சி.ஏ. சத்யா ஆகிய தாங்கள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் வகித்த துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்தும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் என்ற தகுதியில் இருந்தும், தங்களை நிரந்தரமாக ஏன் நீக்க கூடாது என கடந்த 17-ந்தேதி அன்று விளக்கம் கேட்டு கழக சட்டதிட்டங்கள் படி நான் அறிவிப்பு வழங்கியிருந்தேன். அந்த அறிவிப்பை, கடந்த 19-ந்தேதி பெற்றுக் கொண்டு தாங்கள் அளித்துள்ள, கடந்த 24-ந்தேதியிட்ட பதில் அறிவிப்பு, மின்னஞ்சல் மூலமாகவும், கடந்த 27-ந்தேதி பதிவு அஞ்சல் மூலமாகவும் கிடைக்கப்பெற்றேன்.
தாங்கள் அளித்துள்ள பதில் அறிவிப்பை, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழு 6-ந்தேதி அன்று ஆய்வு செய்து அறிக்கை அளித்தது. பதில் அறிவிப்பில் குற்றச்சாட்டுக்களை நீங்கள் மறுக்கவில்லை. குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமும் அளிக்கவில்லை
. தாங்கள் அளித்துள்ள பதில் அறிவிப்பு ஒழுங்கு நடவடிக்கைகளை கைவிட முகாந்திரமாக இல்லை. தங்கள் மீதுள்ள குற்றச்சாட்டுகளுக்கான பதில் முற்றிலும் ஏற்கத்தக்கது அல்ல. தங்கள் மீதுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளும் உறுதி செய்யப்படுகிறது. கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கை குறிக்கோள், நன்மதிப்பு, ஒற்றுமை ஆகியவற்றிற்கு கேடு விளைவிக்கும் வகையில், பொது வெளியில் கட்சிக்கும், தலைமைக்கும் எதிராக செயல்பட்டு, கழக சட்ட திட்டங்கள் விதி-35 பிரிவு 2-ன் படி, கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றம் புரிந்து, கழக சட்ட திட்டங்கள் விதி-35 பிரிவு 6-ன் படி, ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு உள்ளாகி துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்தும், கழகத்தின் அடிப்படை உறுப்பினர் தகுதியில் இருந்தும் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டு இருக்கும் தங்களை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின், சட்ட திட்டங்கள் படி துணைப் பொதுச் செயலாளர் உள்ளிட்ட கழகத்தின் அடிப்படை உறுப்பினர் என்ற தகுதியில் இருந்து நிரந்தரமாக நீக்கி அறிவிக்கிறேன்.
மதிமுகவின் பொறுப்பில் இருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் தகுதியில் இருந்தும் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கும் தங்களை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்ட திட்டங்கள் விதி-19, பிரிவு-5 விதி-19, பிரிவு- 12, விதி-35, பிரிவு-14, விதி-35 பிரிவு-15ன் படி துணைப் பொதுச்செயலர் உள்ளிட்ட கட்சியின் அடிப்படை உறுப்பினர் என்ற தகுதியில் இருந்து நிரந்தரமாக நீக்கி அறிவிக்கிறேன்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
