சென்னை: மகாளய அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரத்துக்கு சிறப்பு பேருந்துகள் பல மாவட்டங்களில் இருந்து இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

தமிழ்நாடு அரசு, பொதுமக்களின் வசதிக்காக, விடுமுறை தினங்களை முன்னிட்டு கூடுதல் பேருந்துகளை இயக்கி வருகிறது. அதன்படி, பண்டிகை காலங்கள், வார விடுமுறை நாட்களில் கூடுதல் பேருந்துகளை இயக்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக மகாளய அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
செப்.21-ம் தேதி மகாளய அமாவாசையை முன்னிட்டு, 20-ம் தேதி சென்னை, சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், பெங்களூருவில் இருந்து ராமேசுவரத்துக்கும், 21-ம் தேதி ராமேசுவரத்தில் இருந்து மேற்கண்ட நகரங்களுக்கும் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்த பேருந்துகளை www.tnstc.in என்ற இணையதளம் மற்றும் tnstc செயலி மூலம் முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. சிறப்பு பேருந்து இயக்கத்தை கண்காணிக்க, குறிப்பிட்ட பேருந்து நிலையங்களில் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.