மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா மே 8ந்தேதி தொடங்க உள்ள நிலையில், அது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சங்கீதா முக்கிய ஆலோசனை நடத்தி வருகிறார்.
வரலாற்று புகழ்மிக்கதும், மதுரையின் அடையாளமாக திகழ்வது, மதுரை மீனாட்சி சுந்தேரேசுவரர் கோவில், சிவன் கோவிலான இதில் வீற்றிரும் மீனாட்சி சக்தி வாய்ந்தாக கருதப்படுவதால், இது மதுரை மீனாட்சி அம்மன் கோயில் என்ற பக்தர்களால் அழைக்கப்பட்டு வருகிறது. . இச்சிவ ஆலயத்தின் மூலவர் சுந்தரேசுவரர் மற்றும் அம்பிகை மீனாட்சியம்மன். இக்கோயிலில், தமிழகத்தில் உள்ள 366 மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்களின் மூலக்கோயிலாக உள்ளது.
இத்தலத்தில், ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழா உலகப்புகழ் பெற்றது. சுமார் 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின்போது மதுரை மட்டுமின்றி சுற்றுவட்டார மாவட்டங்களும் களைகட்டும். மேலும், முக்கிய நிகழ்ச்சிகளாக பார்க்கப்படும் மீனாட்சிக் திருக்கல்யாணமும், அழகரின் வைகை ஆற்று வைபவமும் மதுரை மக்களின் வாழ்வியலோடு கலந்துவிட்ட ஒன்று. இந்த நிகழ்வில் மதுரை மட்டுமல்லாது தென் மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் இந்த சித்திரை திருவிழாவில் பங்கேற்று சாமி தரிசனம் செய்வார்கள்.
குறிப்பாக மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றம் நடைபெற்றால் மதுரை மாவட்டம் முழுவதும் கொடியேற்றம் நடந்ததாக மதுரை மக்கள் கருதுவார்கள். கொடியேற்றம் செய்யப்பட்ட நாளிலிருந்து கிட்டத்தட்ட ஒரு மாதங்களுக்கு மதுரை மாவட்டம் முழுவதும் விழா கோலம் பூண்டு வெகு விமர்சையாக காட்சி யளிக்கும். இதற்காக கடந்த சில மாதங்களாகவே அப்பகுதி மக்கள் திருவிழாவை கொண்டாட தயாராகி வருகின்றனர்.
இந்த ஆண்டு சித்திரை திருவிழாவிழாவிற்கான அறிவிப்பை கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி சித்திரைத் திருவிழா மே 8 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை நடைபெறுகிறது . முக்கிய நிகழ்வான, மே 12 ஆம் தேதி காலை 5.45 மணியிலிருந்து 6.10 மணிக்குள்ளாக சித்திரை திருவிழாவில் சிகர நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுகிறார் என அழகர் கோவில் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
மதுரை சித்திரை திருவிழா – முக்கியத் தேதிகள் :
- சித்திரைத் திருவிழா மே 8 ஆம் தேதி தொடங்கி மே 17 ஆம் தேதி வரை நடைபெறுகிறது
- மே 10 ஆம் தேதி மாலை 6 மணி முதல் 6.15 மணிக்குள்ளாக அழகர் கோயிலில் இருந்து கள்ளழகர் மதுரை நோக்கி புறப்படுகிறார்
- மே 11 ஆம் தேதி மூன்று மாவடியில் கள்ளழகருக்கு எதிர்சேவை நடைபெறுகிறது
- மே 12 ஆம் தேதி காலை 5.45 மணியிலிருந்து 6.10 மணிக்குள்ளாக சித்திரை திருவிழாவில் சிகர நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுகிறார்
- மே 12 ஆம் தேதி ராமராயர் மண்டபத்தில் கள்ளழகருக்கு தண்ணீர் பீச்சும் வைபவம் நடைபெறுகிறது
- மே 13ஆம் தேதி தேனூர் மண்டபத்தில் கள்ளழகர் மண்டுக முனிவர்களுக்கு சாப விமோசனம் அளிக்கிறார்
- மே 13 இரவு முதல் 14 அதிகாலை வரை ராமராயர் மண்டபத்தில் கள்ளழகருக்கு தசாவதார கோலங்களில் காட்சியளிக்கிறார்
- மே 14 ஆம் தேதி தல்லாகுளம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் கள்ளழகர் பூப்பல்லத்தில் எழுந்தருளுகிறார்
- மே 15 ஆம் தேதி அதிகாலை கள்ளழகர் அழகர் மலையை நோக்கி புறப்படுகிறார்
- மே 16 ஆம் தேதி காலை 10 மணி முதல் 10.20 மணிக்குள்ளாக கள்ளழகர் அழகர் மலைக்கு வந்தடைகிறார்
இந்த நிலையில் மதுரை சித்திரை திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநகர காவல் ஆணையாளர் லோகநாதன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த், வருவாய்த்துறை, காவல்துறை, ஊரக வளர்ச்சித்துறை, மாநகராட்சி, தீயணைப்புத்துறை மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் சங்கீதா , ” கள்ளழகர் வைகை ஆற்றை நோக்கி வரும் போது கோரிப்பாளையம் பகுதியில் 10 லட்சம் மக்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கோரிப்பாளையம் – நெல்பேட்டை இடையே மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது, மேம்பால பணிகளால் மக்கள் பாதிக்காத வண்ணம் நடவடிக்கைகள் எடுக்கப்படும். கட்டப்பட்டு வரும் மேம்பால தூண்களை சுற்றி பாதுகாப்பு தடுப்புகள் அமைக்கப்பட உத்தரவிட்டு உள்ளோம்.
கள்ளழகர் வரும் பாதையான அழகர் கோயிலில் இருந்து வண்டியூர் வரை ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு குடிநீர் தொட்டி வைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது” என தெரிவித்தார்.