மதுரை: மதுரை ஆதீனம் ஹரிஹர ஞானசம்பந்த தேசிகர் விலக வேண்டும் என வலியுறுத்தி மதுரை ஆதீன விஸ்வலிங்க தம்பிரான், ஆதீனம்மீது புகார் கூறி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை ஆதீனமாக இருந்த அருணகிரிநாதரின் மறைவுக்குப் பிறகு ஹரிஹர ஞானசம்பந்த தேசிக சுவாமிகள், மதுரை ஆதீன மடத்தின் பொறுப்பு வகித்து வருகிறார். இவர் மதுரை ஆதினத்தின் 293ஆவது மடாதிபதியாவார். அதாவது, மதுரை குருமகா சந்நிதானத்தின் 293ஆவது சன்நிதானமாக, ஸ்ரீலஸ்ரீ ஹரிஹரர் ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் இருந்து வருகிறார். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் நியமனம் செய்யப்பட்ட நிலையில், இவருக்கும், அங்குள்ள தம்பிரானுக்கும் இடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் இந்து மதத்தில் தீவிர ஈடுபாடு கொண்ட மதுரை ஆதீனம் தேசிகர், அதுதொடர்பான சில கருத்துக்களை கூறுவதுதற்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அண்மையில் தன்மீது கார்மூலம் மோத முயற்சித்தாக அவர் கூறிய புகார் சலசலப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக அவர்மீது வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில், மதுரை ஆதீனம் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, மறைந்த மதுரை ஆதீனம் அருணகிரிநாதரின் நினைவிடத்தில் அமர்ந்து இளைய ஆதீனம் தம்பிரான் உண்ணாவிரதம் மேற்கொண்டார். அடுத்த ஆதீனத்தைத் தேர்வு செய்வதில் தன்னிச்சையாக மதுரை ஆதீனம் செயல்படுவதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார். இது பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், இளைய ஆதீனம் தம்பிரான் இன்று காலை திடீரென மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து, தற்போதைய ஆதினம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் அறநிலையத்துறை தலையிட வேண்டும் என்றும் மனு கொடுத்துள்ளார்.
அவரது மனுவில், , மதுரை ஆதீன மட விவகாரத்தில் அறநிலையத்துறை தலையிட வேண்டும் என தம்பிரான் கோரிக்கை விடுத்துள்ளார். இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது; மதுரை ஆதீனம் ஹரிஹர ஞானசம்பந்த தேசிகர் விலக வேண்டும். மதுரை ஆதீனம் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளதால் ஆதீன மட விவகாரங்களில் இருந்து விலக வேண்டும். மதுரை ஆதீனத்தில் பாரம்பரியமாக கடைபிடிக்கும் மரபுகளை தற்போதைய ஆதீனம் மீறுகிறார். வழக்கில் இருந்து விடுபட்ட பின்னரே மதுரை ஆதீனம் தனது பணிகளை தொடர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மதுரை ஆதினத்தில் நடைபெறும் பிரச்சினைகளை, இந்துசமய அறநிலையத்துறை தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்றவர், பிற அதீனங்களுடன் ஆலோசித்து மதுரை ஆதீனத்துக்கு இளைய சன்னிதானத்தை தேர்வு செய்ய வேண்டும் என கூறியவர், மதுரை ஆதீனமடத்தில் அரசியல் கலப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறினார்.