சென்னை: தமிழகம் முழுவதும் அறநிலையத்துறையின் கீழ் உள்ள 48 பெரிய கோயில்களின் முழு வரவு – செலவு தொடர்பான தணிக்கை விவரங்களை இரண்டு வாரங்களில் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் அமர்வு உத்தரவிட்டு உள்ளது.
ஆலய வழிபடுவோர் சங்கத் தலைவர் டி.ஆர்.ரமேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2023-ல் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவை வெளியிட்டு உள்ளது. இது திமுக அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

முன்னதாக மனுதாரர் தாக்கல் செய்திருந்த மனுவில், அறநிலையத் துறை சட்டப்படி, அத்துறையின் வரவு-செலவு தொடர்பாக ஒவ்வோர் ஆண்டும் தகுதியான தணிக்கையாளர்களைக் கொண்டு கண்டிப்பாக தணிக்கை செய்ய வேண்டும். ஆனால், அதிக அளவில் வருமானம் வரக்கூடிய பெரிய கோயில்களின் வருவாயை முறையாக தணிக்கை செய்வது இலலை. மேலும் அதை பொதுவெளியில் பார்வைக்கும் வைப்பது இல்லை. இதனால் கோவில்களுக்கு வரும் வருமானத்தில், எவ்வளவு நிதி செலவு செய்யப்படுகிறது, எவ்வளவு உபரிநிதி எவ்வளவு இருப்பு உள்ளது, என்பது பொதுமக்களுக்கு தெரிவதில்லை.
இதன் காரணமாக கோயில் நிதி, அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு வாகனம் வாங்குவதற்காகவும், துறை சார்ந்த கூட்டங்களுக்கு டீ, காபி, தண்ணீர் பாட்டில், பிஸ்கெட் வாங்குவதற்காகவும் செலவிடப்படுகிறது.
எனவே, தமிழகம் முழுவதும் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அனைத்து கோயில்களின் வரவு-செலவு குறித்த ஆண்டு தணிக்கை விவரங்களை அறநிலையத் துறையின் இணையதளத்தில் அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் பிடிஎப் வடிவில் பதிவேற்றம் செய்யுமாறு அறநிலையத் துறைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமனற் நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், எஸ்.சவுந்தர் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரிக்கப்பட்ட வந்தது. நேற்று (டிசம்பர் 5ந்தேதி) விசாரணையின்போது, அறநிலையத் துறை தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.ஆர்.ஆர். அருண் நடராஜன், “ரூ.1 கோடிக்கும் மேல் வருமானம் உள்ள 48 கோயில்களின் வரவு செலவு தொடர்பாக தணிக்கை செய்யப்பட்டு, அதுகுறித்த சுருக்கமான விவரங்கள் இணையத்தி்ல் பதிவேற்றம் செய்யப்பட்டு வி்ட்டது, மேலும், பல கோயில்களின் தணி்க்கை விவரங்கள் தயாராக உள்ளன” என்றார்.
அதற்கு மனுதாரரான டி.ஆர்.ரமேஷ், “பெரிய கோயில்களின் வரவு-செலவு தொடர்பான முழு விவர அறிக்கை இன்னும் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படவில்லை என்று குற்றம் சாட்டினார். மேலும், கோவில்களுக்கு ஆண்டுதோறும் கிடைத்த வருமானம், செலவுக்கான முழு விவரங்கள் குறித்த தணிக்கை விவரங்களை தாக்கல் செய்யவில்லை” என்பதையும் ஆதாரங்களுடன் தெரிவித்தார்.
இதையடுத்து அறநிலையத்துறை சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர், இணையதளத்தில் சுருக்கமான தணிக்கை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “அறநிலையத் துறை சார்பில் சுருக்கமான தணிக்கை விவரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும், தமிழகம் முழுவதும் உள்ள 48 பெரிய கோயில்களின் தணிக்கை தொடர்பான முழு விவரங்களையும் இரு வாரங்களில் இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டு, விசாரணையை டிச. 18-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.