சென்னை: திருப்பரங்குன்றம்  மலை உச்சியில்  கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும், திருப்பரங்குன்றம் மலை முருகனுக்கே சொந்தம் என உயர்நீதிமன்றம் அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என  தமிழக அரசு  அறிவித்து உள்ளது.

 திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும்  விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று தமிழக சட்டத் துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

 மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள சிக்கந்தர் தர்கா அருகே உள்ள ஒரு கல் தூணில் விளக்கேற்ற அனுமதி வழங்கிய சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாடப்போவதாக தமிழக அரசு  அறிவித்தது.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட்ட தனி நீதிபதியின் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இரு நீதிபதிகள் அமர்வில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.  இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்து வந்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் ஆகியோர் அமர்வு, தனி நீதிபதி சுவாமிநாதன் அளித்த தீர்ப்பை  உறுதி செய்தது. மேலும், இந்த விவகாரத்தில், தேவையற்ற பதற்றத்தை உருவாக்கிய   தமிழக அரசைக் கடுமையாக விமர்சித்த நீதிபதிகள்,  திருப்பரங்குன்றத்தில் பொதுஅமைதிக்கு குந்தகம் ஏற்படும் என்றால், அதற்கு தமிழ்நாடு அரசுதான் காரணமாக இருக்க வேண்டும் என்றும், அரசியல் காரணங்களுக்காக எந்த ஒரு மாநில அரசும் இந்த அளவிற்கு கீழ் நிலைக்கு செல்லாக்கூடாது என்று கூறியதுடன், இந்த விஷயத்தில் தமிழ்நாடு அரசின் வாதம் அபத்தம் என்று சாடியது.

மேலும் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில், மதுரை மாவட்ட ஆட்சியரின் மேற்பார்வையில் தீபம் ஏற்ற கோயில் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டனர்.

இதுகுறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் ரகுபதி,  “திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்படும். தீபத்தூணில் தீபம் ஏற்றியதற்கான சான்று கடந்த 100 ஆண்டு காலமாக இல்லை. திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்றும் வழக்கம் தமிழ்நாட்டில் கிடையாது. யாரோ ஒருவர் கேட்டதற்காக தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டிருக்கிறார்கள். இல்லாத ஒரு வழக்கத்தை நீதிமன்றம் ஏன் புகுத்த வேண்டும்? பிரசனைக்குரிய அந்த தூண் தீபத்தூண் கிடையாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

[youtube-feed feed=1]