சென்னை: புதிய குற்றவியல் சட்டங்களின் பெயர் குறித்து மத்தியஅரசு விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு உள்ளது.

நாடு முழுவதும் ஜூலை 1ந்தேதி முதல் மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் அமலுக்கு வந்துள்ளது. ஏற்கனவே நடைமுறையில் இருந்து, இந்திய தண்டனைச் சட்டம், இந்திய சாட்சியங்கள் சட்டம் போன்ற குற்றவியல் சட்டங்கள் நீக்கப்பட்டு, பாரதிய நியாய சம்ஹிதா, பாரதிய நாகரிக சுரக்க்ஷா, பாரதிய சாக்ஷிய அதினியம் என்ற பெயரில்  3 புதிய குற்றவியல் சட்டங்கள் திங்கள்கிழமை (ஜூலை 1)  முதல் அமலுக்கு வந்ததுள்ளது.

இந்த நிலையில், வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்யன் என்பவர்,  புதிய குற்றவியல் சட்டங்களின் ஹிந்திப் பெயர்களை அரசியலமைப்புக்கு எதிரானது என்று உத்தரவிடக் கோரி  சென்னை உயர்நீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்துள்ளார். அவரது மனுவில், “பாரதிய நியாய சம்ஹிதா, பாரதிய நாகரிக சுரக்க்ஷா, பாரதிய சாக்ஷிய அதினியம் ஆகிய 3 புதிய குற்றவியல் சட்டங்களுக்கு ஹிந்தியில் பெயரிடப்பட்டுள்ளது.

அலுவல் மொழிச் சட்டம் 1963, தமிழ்நாடு அலுவல் மொழிச் சட்டம் 1956 இன் படி, அரசியலமைப்புக்கு எதிரானது என்று உத்தரவிட வேண்டும். ஹிந்தி மற்றும் சமஸ்கிருதம் மொழிகளில் புதிய சட்டங்களுக்கு அரசு பெயரிட்டுள்ளது.

நாட்டில் 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்கள் உள்ளன. அவற்றில் 9 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் மட்டுமே ஹிந்தி அலுவல் மொழியாக உள்ளது. 56.37 இந்தியர்களுக்கு ஹிந்தி தாய் மொழி இல்லை. ஆகையால், அமைச்சரவை செயலகம், உள்துறை செயலகம் மற்றும் சட்டச் செயலகங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் மாற்றம் செய்ய உத்தரவிடவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

 மேலும், ஹிந்தி மற்றும் சமஸ்கிருதம் தெரியாத சட்ட மாணவர்கள், சட்ட ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், சட்ட அதிகாரிகள், நீதித்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி தான் இந்த மனுவை தாக்கல் செய்ததாக ஆதித்யன் தெரிவித்தார்.

இந்த மனு  இன்று  சென்னை உயர்நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.  அப்போது மத்தியஅரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், புதிய குற்றவியல் சட்டங்கள் அரசியலமைப்பு விதிகளை மீறவில்லை என்றும் யாருடைய அடிப்படை உரிமையையும் மீறவில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், சட்டங்களுக்கு பெயரிடும் விவகாரம் நாடாளுமன்றத்தின் முடிவு என்றும் நீதிமன்றங்கள் தலையிட முடியாது என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, மத்தியஅரசுத் தரப்பில் விரிவான பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிமன்றம், விசாரணையை 23-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

நாடு முழுவதும் இன்று முதல் அமலானது 3 புதிய குற்றவியல் சட்டங்கள்…