குஜராத்தின் ஆனந்த் மாவட்டத்தின் கிராமப்புற மேலாண்மை நிறுவனத்தை (Institute of Rural Management Anand – IRMA) கூட்டுறவு சங்கங்களுக்கு தகுதியான மனிதவளத்தை உருவாக்குவதற்கான ஒரு பல்கலைக்கழகமாக நிறுவுவதை நோக்கமாகக் கொண்ட திரிபுவன் சஹ்காரி பல்கலைக்கழக மசோதா, 2025 மக்களவையில் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது.

மக்களவையில் இந்த மசோதா மீதான விவாதத்தின் போது, ​​இந்தியாவில் கூட்டுறவு இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரும் அமுல் பால் கூட்டுறவு நிறுவனத்திற்கு அடித்தளம் அமைப்பதில் முக்கிய பங்கு வகித்தவருமான திரிபுவன்தாஸ் கிஷிபாய் படேலின் பெயரை இந்த பல்கலைக்கழத்திற்கு வைத்திருப்பதாக மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

“இந்தப் பல்கலைக்கழகம் கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்தும், சுய வேலைவாய்ப்பு மற்றும் சிறு தொழில்முனைவோரை வளர்க்கும், சமூக உள்ளடக்கத்தை அதிகரிக்கும் மற்றும் புதுமை மற்றும் ஆராய்ச்சியில் பல புதிய தரங்களை நிறுவும்,” என்று ஷா கூறினார்.

இந்தப் பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் கூட்டுறவுத் துறையில் 8,00,000க்கும் மேற்பட்ட தகுதிவாய்ந்த மற்றும் பயிற்சி பெற்ற வேலை தேடுபவர்களை உருவாக்கும் திறனைக் கொண்டிருக்கும் என்று வலியுறுத்தினார்.

இந்த பல்கலைக்கழகத்தை “தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனம்” என்று அறிவிக்கத் தேவையான முன்மொழிவு இந்த மசோதாவில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

குஜராத்தில் பல்கலைக்கழகம் அமைக்கப்படுவதால், மாநில அரசால் நிலம் வழங்கப்பட்டாலும், அது “நாட்டின் நீளம் மற்றும் அகலம்” முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களையும் உள்ளடக்கும் என்று ஷா கூறினார். நாடு முழுவதும் உள்ள நிறுவனங்கள் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

நாட்டில் உள்ள அனைத்து கூட்டுறவு சங்கங்களுக்கும் காப்பீட்டுத் தொகையை வழங்குவதற்காக ஒரு கூட்டுறவு காப்பீட்டு நிறுவனம் விரைவில் அமைக்கப்படும் என்றும் மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். “இது உருவாக்கப்பட்டவுடன், இதுவே மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமாக இருக்கும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.”

ஓலா மற்றும் உபர் போன்ற ஒருங்கிணைப்பாளர்களைப் போலவே வரும் நாட்களில், கூட்டுறவு மாதிரியில் “சஹ்கார் டாக்ஸி” செயல்படுத்தப்படும் என்று அமித்ஷா மேலும் கூறினார்.

[youtube-feed feed=1]