பெங்களூரு
லோக் ஆயுக்தா காவலர்கள் சித்தராமையா நில மோசடி வழக்கில் குற்றமற்றவர் எனத் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2016 ஆம் ஆண்டு கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு சொந்தமான 3.16 ஏக்கர் நிலத்தை மைசூரு நகர மேம்பாட்டு ஆணையம் கையகப்படுத்தி இதற்கு மாற்றாக அவருக்கு மைசூருவின் பிரதான இடத்தில் 14 வீட்டு மனைகளை ஒதுக்கியது. ஆனால் கையகப்படுத்திய நிலத்தின் மதிப்பைவிட, மாற்றாக வழங்கப்பட்ட இடத்தின் மதிப்பு பன்மடங்கு அதிகமாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
வீட்டுமனைகள் ஒதுக்கியதில் முறைகேடு இருப்பதாககூறி சினேகமயி கிருஷ்ணா என்பவர் பெங்களூரு சிறப்புநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தொடர்பாக முதல்வர் சித்தராமையா, அவருடைய மனைவி மீது மைசூரு லோக் அயுக்தா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். லோக் அயுக்தா போலீசாருக்கு விசாரணை முடிந்து இறுதி அறிக்கையை வருகிற 24-ந்தேதிக்குள் தாக்கல் செய்ய பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
நேற்று பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பான 11 ஆயிரத்து 200 பக்கங்கள் கொண்ட இறுதி அறிக்கையை லோக்அயுக்தா போலீசார் தாக்கல் செய்தனர். அந்த அறிக்கையில் முதல்வர் சித்தராமையா மனைவி பார்வதியிடம் இருந்து கையகப்படுத்தப்பட்ட 3.16 ஏக்கர் நிலத்திற்கு மாற்றாகதான் 14 வீட்டுமனைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக வும் இதில் அதிகாரிகள்தான் விதிமுறைகளை மீறி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே கர்நாடக முதல்வர் சித்தராமையா இந்த வழக்கில் குற்றமற்றவர் என லோக்அயுக்தா போலீசார் தெரிவித்துள்ளனர். நீதிமன்ற,ம் இந்த விசாரணை அறிக்கையை கோர்ட்டு ஏற்றுக் கொண்டதைத் தொடர்ந்து இந்த அறிக்கை குறித்து பதிலளிக்குமாறு புகார்தாரர் ஸ்நேகமயி கிருஷ்ணாவுக்கு லோக் ஆயுக்தா நீதிமன்றம் உத்தரவிட்டு இந்த வழக்கின் விசாரணை வருகிற 24 ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.