டெல்லி: மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை  6வது முறை சம்மன் அனுப்பி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லி அரசின் மதுபான கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்த அமலாக்கத் துறை முடிவு செய்து விசாரணைக்கு அழைத்து வருகிறது. ஆனால், அவர் இதுவரை விசாரணைக்கு ஆஜராகாமல் உள்ளார். தனக்கு அனுப்பிய சம்மன் சட்டவிரோதமானது. அதை திரும்பப் பெற வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். மேலும் மத்திய பாஜக அரசுமீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகிறார். இதுவரை 5முறையும் ஆஜராகாமல் உள்ள நிலையில், அமலாக்கத்துறை   டெல்லி நீதிமன்றத்தில் முறையிட்டது. இதையடுத்து, அவர் விசாரணைக்கு ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது. வரும் 17-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என கெஜ்ரிவாலுக்கு ரோஸ் அவென்யு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

இதைத்தொடர்ந்து,  தற்போது 6-வது முறையாக அமலாக்கத்துறை கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. வருகிற 19-ம் தேதி ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இந்த முறையும் அவர் ஆஜராவாரா என்பது தெரியவில்லை.

தன்னை கைதுசெய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் சம்மன் அனுப்பப்படுகிறது என கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.