சென்னை: போலி ஆவனங்கள் மூலம் நிலம் அபகரிப்பு செய்ததாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீதான வழக்கை தள்ளுபடி செய்யக்கோரிய மனுவை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்து உத்தரவட்டது.
தனக்கு எதிரான நில அபகரிப்பு வழக்கை ரத்து செய்யக் கோரி அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்த மனுவைச் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தர விட்டது.
சென்னை கிண்டியில் உள்ள தொழிலாளர் காலனியில் எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்த குடியிருப்பை, போலி ஆவணங்கள் மூலம் பதிவு செய்ததாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தரப்பில், குடியிருப்பை வாங்கியதில் அரசுக்கு எந்த இழப்பும் ஏற்படவில்லை என்றும் எந்த மோசடியும் நடை பெறவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. அதிகார துஷ்பிரயோகம் செய்ததற்கு எந்த ஆதாரங்களும் இல்லாததால் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் வாதிடப்பட்டது.
இதை ஏற்க மறுத்த உயர்நீதிமன்றம், அமைச்சர் மா.சுப்பிரமணியனின் மனுவைத் தள்ளுபடி செய்து, விசாரணையைத் தொடர சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.
முன்னதாக, அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி மேயராக பதவி வகித்தபோது சென்னை கிண்டி சிட்கோ பகுதியில் எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட குடியிருப்பு மனையிடத்தை, போலி ஆவணங்கள் தயாரித்து தனது மனைவி காஞ்சனாவின் பெயருக்கு மாற்றியதாக குற்றம் சாட்டப்பட்டது.
இது தொடர்பாக சைதாப்பேட்டையைச் சேர்ந்த பார்த்திபன் என்பவர் அளித்த புகாரின்பேரில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் தற்போது அமைச்சராக உள்ள மா.சுப்பிரமணியன் மீது நில அபகரிப்பு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னை எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி மா.சுப்பிரமணியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
காவல துறை தரப்பில், “இந்த வழக்கின் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நீதிமன்றம் தான் முடிவு செய்ய முடியும்” என தெரிவிக்கப்பட்டது. “அமைச்சர் மா.சுப்பிரமணி யனுக்கு எதிரான இந்த வழக்கை ரத்து செய்யக் கூடாது” என புகார்தாரரான பார்த்திபன் தரப்பிலும் வாதிடப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார். இதைத்தொடர்ந்து இந்த வழக்கில் மார்ச் 28 அன்று, தீர்ப்பளித்த நீதிபதி பி.வேல்முருகன், அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இந்த வழக்கில் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்து விசாரணையைத் தொடர சிறப்பு நீதிமன்றத்துக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.