சென்னை: குமரி அனந்தன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை, முன்னாள் தலைவர் மறைவுக்காக காங்கிரஸ் கட்சி கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்படும், ஒரு வாரம் துக்கம் அனுசரிக்கப்படும் என  அறிவித்துள்ளார்.

முதுபெரும் அரசியல் தலைவரான குமரி அனந்தன் சிறுநீரக பிரச்சனை காரணமாக, சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 4-ம் தேதி முதல் சிகிச்சை பெற்று வந்தார்.  இந்த நிலையில்,  சிகிச்சை பலனின்றி அவர் தனது 93-வது வயதில் காலமானார். 5 முறை எம்.எல்.ஏ-வாகவும், ஒரு முறை எம்.பி-யாகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட குமரி அனந்தன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

இலக்கிய செல்வர் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட குமரி அனந்தனுக்கு, கடந்த 2024-ம் ஆண்டு தமிழக அரசு ‘தகைசால் தமிழர்’ விருது வழங்கி கௌரவித்தது. மறைந்த குமரி அனந்தனின் உடல் சாலிகிராமத்தில் உள்ள தமிழிசை சௌந்தரராஜன் இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மறைந்த குமரி அனந்தன் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ரவி, அதிமுக தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக எம்.பி. கனிமொழி, நாதக தலைவர் சீமான் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், இலக்கிய ஆர்வலர்கள், திரையுலகினர் என பல தரப்பினரும் நேரில்  அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை, தமது இறுதி மூச்சு வரை காங்கிரஸ் வளர்ச்சிக்காக ஓய்வின்றி உழைத்தவர்   என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

மேலும்,  குமரியார் மறைவுக்கு  காங்கிரஸ் கட்சி சார்பில் ஒரு வாரம் துக்கம் கடைபிடிக்கப்படும் என்றும் கட்சிக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் அறிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காங்கிரஸ் பேரியக்கத்தின் முதுபெரும் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினராக பல்வேறு பொறுப்புகளை நிதானமாகவும், நம்பிக்கையுடனும் வரலாற்று சிறப்புமிக்க தலைவராக விளங்கிய திரு. குமரி ஆனந்தன் அவர்கள் காலமானார் என்பது செய்தி அறிந்து மிகுந்த வருத்தமும், துயரமும் அடைந்தேன். தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, 19 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக, மிகச் சிறப்பாக பணியாற்றியவர். 1977ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் நாகர்கோவில் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். நாடாளுமன்றத்தில் தமிழ் மொழியில் கேள்விகளை கேட்டு, இந்திய மொழிகள் அனைத்தும் ஆட்சியாளர்களின் அவையில் ஒலிக்க வேண்டும் என முத்திரை பதித்தவர்.

1996இல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக தேர்வு செய்யப்பட்டு மிகச் சிறந்த முறையில் கட்சியை வழி நடத்தினார். திரு.குமரி ஆனந்தன் அவர்கள் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக தனது வாழ்நாளையே அர்ப்பணித்தவர். அவருடைய அரசியல் பயணம், சமூக நலனுக்காக அவர் மேற்கொண்ட முயற்சிகள், தமிழ் மக்கள் நலனுக்காக அவர் செலுத்திய பணி, இந்நாட்டின் ஜனநாயக வளர்ச்சிக்கு அளித்த பங்களிப்பு நினைவிற்குரியது. அவரது தூய்மை, நேர்மை மற்றும் தலைமைத் தன்மை இன்றும் இளைஞர்களுக்கு வழிகாட்டியாக உள்ளது. ‘இலக்கியச் செல்வர்’ என்று புகழப்பட்ட திரு.குமரி அனந்தன் அவர்கள், தமிழ் இலக்கியத்தில் வித்தகராக விளங்கியவர்.

கலித்தொகை இன்பம், படித்தேன், கொடுத்தேன், நல்லாட்சி தந்த நாயகன் காமராஜ் உள்ளிட்ட 29 நூல்களை எழுதி உள்ளார். திரு.குமரி ஆனந்தன் அவர்களின் மறைவு தமிழ் நாட்டுக்கும், இந்திய தேசிய காங்கிரஸ் பேரியக்கத்திற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். திரு.குமரி ஆனந்தன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர்கள், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் காங்கிரஸ் பேரியக்க நண்பர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு கூறி உள்ளார்.