சென்னை: காலாண்டு விடுமுறை – ஆயுதஜபூஜை தொடர் விடுமுறையையொட்டி மாநிலம் முழுவதும் 3,380 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. இதில் பயணிக்க 90 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளதாக போக்குவரத்து துறை தகவல் தெரிவித்துள்ளது
அத்துடன் தற்போது தொடங்கி உள்ள குலசை தசரா திருவிழா, திருப்பதி பிரமோற்சவம் விழாக்களையொட்டி, அந்த பகுதிகளுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளது.

பள்ளி காலாண்டுத் தேர்வு விடுமுறை மற்றும் ஆயுதபூஜை விடுமுறையையொட்டி 3,380 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், பள்ளி காலாண்டுத் தேர்வு விடுமுறை மற்றும் ஆயுதபூஜை விடுமுறையையொட்டி செப்.26, 27, 29, 30 ஆகிய தேதிகளில் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 2,430 பேருந்துகளும், கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 400 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 250 பேருந்துகளும் இயக்கப்படும்.
பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கு 300 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 3,380 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதேபோல், விடுமுறை முடிந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக அக்.4, 5-ம் தேதிகளில் அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சிறப்பு பேருந்து இயக்கத்தைக் கண்காணிக்க அனைத்து நிலையங்களிலும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வார இறுதியில் பயணிக்க இதுவரை 57 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
சிறப்பு கண்காணிப்புக் குழு: இதற்கிடையே, ஆயுதபூஜை விடுமுறையையொட்டி தனியார் ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூல் செய்தால் அதைத் தடுக்க தமிழகம் முழுவதும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மற்றும் போக்குவரத்து சோதனைச்சாவடி ஆய்வாளர்கள் ஆகியோரைக் கொண்டு சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. கூடுதல் கட்டணம் வசூலிக் கப்பட்டது தெரியவந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து ஆணையர் இரா.கஜலட்சுமி தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் 22,735 பயணிகளும் நாளை 14,415 பயணிகளும் ஞாயிற்றுக்கிழமை 11,908 பயணிகளும் திங்கட்கிழமை 8,070 பயணிகளும் மற்றும் செவ்வாய் அன்று 33,138 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.
இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் மொபைல் ஆப் மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இச்சிறப்பு பேருந்து இயக்கத்தை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
*ஆம்னி பஸ்களுக்கு எச்சரிக்கை
போக்குவரத்து ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,‘ ஆயுதபூஜை, விஜயதசமி மற்றும் தொடர் வார விடுமுறையை முன்னிட்டு அக்.1 முதல் அக்.5 வரை பொதுமக்கள் வெளியூர் பயணம் மேற்கொள்வதை பயன்படுத்தி தனியார் ஆம்னி பேருந்துகள் அதிகப்படியான கட்டணம் வசூல் செய்தால் அதனை தடுக்க தமிழ்நாடு முழுவதும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மற்றும் போக்குவரத்து சோதனைச்சாவடி ஆய்வாளர்கள் ஆகியோரை கொண்டு சிறப்புக்குழு அமைக்கப்பட்டு அதிக கட்டணம் வசூல் செய்யும் மற்றும் அனுமதிக்கு புறம்பாக இயங்கும் ஆம்னி பேருந்துகளை தீவிரமாக சோதனை செய்து அபராதம் விதித்தும், வாகனங்களை சிறைபிடித்தும் வரி வசூல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,’என்று கூறப்பட்டுள்ளது.
*திருப்பதி, குலசைக்கும்…
மேலும் ஒரு அறிக்கையில், 2025ம் ஆண்டிற்கான திருப்பதி திருமலையில் பிரமோற்சவ திருவிழா நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம், சென்னை, திருச்சி, தஞ்சாவூர், சேலம், கோயம்புத்தூர், மதுரை, காரைக்குடி, கும்பகோணம், நாகப்பட்டினம், செங்கோட்டை மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களிலிருந்து திருப்பதிக்கு கடந்த 22ம் தேதியிலிருந்து அடுத்த மாதம் 6ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
அதேபோல், தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் நடைபெறும் தசரா பண்டிகையையொட்டி கடந்த 23ம் தேதியில் இருந்து அடுத்த மாதம் 3ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அதன்படி, சென்னையில் இருந்து திருச்செந்தூர், குலசேகரப்பட்டினத்திற்கும் மற்றும் கோவையிலிருந்து திருச்செந்தூர், குலசேகரப்பட்டினத்திற்கும் தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதல் பேருந்துகள் இயக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், பண்டிகை முடிந்து திரும்புவதற்கு ஏதுவாக அக்.1ம் தேதி முதல் அக்.3ம் தேதி வரை கூடுதல் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.