உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கிரண் நேகி பாலியல் பலாத்காரம் மற்றும் கொடூர கொலை வழக்கில் தொடர்புடைய மூன்று குற்றவாளிகளையும் உச்சநீதிமன்றம் நேற்று விடுதலை செய்தது.

2012 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9 ம் தேதி உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 19 வயதான கிரண் நேகி வேலை முடித்து திரும்பும் போது மூன்று இளைஞர்களால் கடத்தப்பட்டு கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

அவரது உடலை ஹரியானா மாநிலத்தில் உள்ள டெல்லியின் புறநகர் பகுதியில் வீசியதோடு கிரணின் கண்கள் மற்றும் காதுகளில் ஆசிட் ஊற்றப்பட்டது. அவரது கண்கள் ஸ்க்ரூடிரைவரால் துளைக்கப்பட்டன. பிறப்புறுப்பில் மது பாட்டில் செருகப்பட்டு பாட்டில் உடைக்கப்பட்டது.

இந்த கொடூர கொலைக்கு காரணமான ராகுல், ரவி மற்றும் வினோத் ஆகிய 3 பேர் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

கீழமை நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் ஆகியவற்றில் இவர்களுக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற மேல்முறையீட்டு விசாரணைக்குப் பிறகு இவர்கள் மூவருக்கும் விடுதலை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டது.

உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கும் நிலையில் தனது 10 ஆண்டுகால சட்டப்போராட்டம் தோல்வியடைந்ததை தாங்கமுடியாமல் கதறி அழுத கிரண் நேகியின் தாயார் மகேஸ்வரி நேகி நீதிமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினார்.

https://twitter.com/Mr_ManmohanSing/status/1589829284205850626

எனக்கு இருந்த ஒரே நம்பிக்கை உடைந்து போனது என்று கூறி அவர் கதறி அழுதது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

பெண்கள் பாதுகாப்பு மற்றும் சமஉரிமை பற்றி பேசும் பாஜக ஆட்சியின் லட்சணம் இதுதானா என்று பலரும் கேள்வி எழுப்பி வருவதோடு நீதிமன்றத்தின் செயல்பாடு ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது என்று கூறி நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.