திருவனந்தபுரம்: கேரள திரையுலகை ஆட்டிபடைக்கும்  பாலியல் வன்கொடுமை  சம்பவம் தொடர்பான  வழக்கில், மாநிலத்தை ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ முகேஷ் கைது செய்யப்பட்டார்.  விசாரணைக்கு பிறகு ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.

கேரள திரையுலகில் நடிகைககளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது குறித்து ஆய்வு செய்த  ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  கடந்த 2017-ஆம் ஆண்டு மலையாள நடிகை தொடா்புடைய வழக்கில், மலையாள திரையுலகில் பெண்கள் சந்திக்கும் பாலியல் துன்புறுத்தல் நிகழ்வுகளைப் பற்றி விசாரிக்க நீதிபதி ஹேமா தலைமையிலான குழுவை கேரள அரசு அமைத்தது. இக் குழுவின் அறிக்கை கடந்த மாதம் வெளியானதைத் தொடா்ந்து, மலையாள திரையுலகைச் சோ்ந்த பெண்கள் பலரும் அடுக்கடுக்கான பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனா். இதில் தற்போதுள்ள  பல மலையாள நடிகர்கள், தயாரிப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் என பலர் மீது ஏராளமான புகார்கள் கூறப்பட்டு வருகிறது.

இதுகுறித்து விசாரிக்க காவல் துறை அதிகாரிகள் 7 போ் கொண்ட சிறப்பு விசாரணை குழுவை (எஸ்ஐடி)  பினராயி விஜயன் தலைமையிலான மாநில அரசு அமைத்தது. எஸ்ஐடி விசாரணையைத் தொடா்ந்து வருகிறது.

இதில், நடிகைகக்ள கொடுக்கும் புகாா்களில்  அடிப்படையில், மலையாள திரையுலகின் பல்வேறு நடிகா்கள், இயக்குநா்கள் மீது பாலியல் வழக்குகள் பதிவாகின.

இந்த நிலையில், மலையாள திரையுலக நடிகை அளித்த பாலியல் வன்கொடுமை புகாரில் ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏவும் நடிகருமான முகேஷ் மீது,   பாலியல் வன்கொடுமை குற்றத்துக்கான இந்திய தண்டனைச் சட்டத்தின் 376-ஆவது பிரிவின்கீழ் வடக்கன்சேரி, மாராடு ஆகிய இரு காவல் நிலையங்களில்  வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதைத்தொடர்ந்து எம்எல்ஏ முகேஷ்,  சிறப்பு விசாரணைக் குழுவால்  செப்டம்பர் 24ந்தேதி கைது செய்யப்பட்டார். அவரிடம் சிறப்பு விசாரணை குழு விசாரணை நடத்தியது.  அவரிடம் மூன்றரை மணி நேரத்துக்கும் மேலாக அதிகாரிகள் விசாரணை நடத்தினா்.  அப்போது,    புகாா்தாரரின் மிரட்டல் முயற்சிகளுக்கு அடிபணிய மறுத்ததன் விளைவாக தன் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக முகேஷ் விளக்கமளித்ததாக கூறப்படுகிறது. முன்னதாக, அவருக்கு முறைப்படி மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது.

இந்த வழக்கில் முகேஷ் ஏற்கனவே, அதாவது  கடந்த செப்டம்பா் 5-ஆம் தேதி  முன்ஜாமீன் பெற்றிருந்ததால்,  அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதும்,  ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா்.

இதற்கிடையில், முகேஷ் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாஜக, காங்கிரஸ் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால்,  குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும்வரை முகேஷ் எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்ய வேண்டிய அவசியமில்லை என்று ஆளும் இடதுசாரி கூட்டணி அவருக்கு ஆதரவுக்கரம் நீட்டி உள்ளது.