புதுடெல்லி

டெல்லி உயர்நீதிமன்றம் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன்மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது.

டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் அமைச்சராக இருந்த சஞ்சய் சிங் ஆகியோர் மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரணைக்குப் பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். அண்மையில் 6 மாத சிறைவாசத்திற்குப் பின்னர், சஞ்சய் சிங் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

அமலாக்கத்துறை டெல்லி முதல்வர் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவாலை, விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு 9 முறை சம்மன் அனுப்பியபோதும், நேரில் ஆஜராகவில்லை. டெல்லி உயர்நீதிமன்றத்தில் இதுகுறித்து நடந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு, அமலாக்கத்துறை கைதுக்கு தடை விதிக்க மறுத்து விட்டது.

கடந்த 21 ஆம் தேதி அமலாக்கத்துறை குழுவினர், கெஜ்ரிவாலின் வீட்டிற்கு சென்று சோதனையில் ஈடுபட்டு 2 மணிநேர சோதனை மற்றும் விசாரணைக்குப் பின்னர், கெஜ்ரிவாலை அன்றிரவு கைது செய்து அழைத்து சென்றனர். ஏப்ரல் 15-ந்தேதி வரை  அவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டு உள்ளதால், அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் தரப்பில் ஜாமீன் மனு மற்றும் அவரை அமலாக்க துறையின் காவலுக்கு அனுப்பியதற்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டது. இன்று விசாரணை மேற்கொண்ட நீதிபதி, கெஜ்ரிவால் முறைகேட்டில் ஈடுபட்டு உள்ளதாகவும், டெல்லி மதுபான கொள்கை உருவாக்கத்தில் மனுதாரரான கெஜ்ரிவால் முக்கிய பங்காற்றி உள்ளதாகவும். அவருடைய பங்கு இருப்பது அமலாக்க துறை அளித்துள்ள சான்றாவணங்களில் இருந்து தெரிய வருகிறது என்று தெரிவித்தார்.

மேலும்,

“இந்த வழக்கை காணொளியில் விசாரித்திருக்கலாம் என்ற வாதம் நிராகரிக்கப்படுகிறது. எப்படி விசாரிக்கப்பட வேண்டும் என்று குற்றஞ்சாட்டப்பட்ட நபர் முடிவு செய்ய முடியாது. முதல்வர் என்பதற்காகத் தனிச் சலுகைகளை வழங்க முடியாது. மக்களவைத் தேர்தல் பற்றி கெஜ்ரிவாலுக்கு தெரியும்.

எனவே தேர்தலை முன்னிட்டு அமலாக்கத் துறை கைது நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளது என்று எடுத்து கொள்ள முடியாது. அப்ரூவரின் வாக்குமூலம் மீது சந்தேகம் எழுப்புவது என்பது, நீதிபதி மற்றும் நீதிமன்றத்தின் மீது பழிசுமத்துவது போலாகி விடும்.

நீதிபதிகள் சட்டத்துக்கு கட்டுப்பட்டவர்கள். அரசியலுக்கு அல்ல, கெஜ்ரிவாலினை கைது சட்டவிரோதமல்ல. மேலும் அமலாக்க துறை காவலுக்கு அனுப்பியதற்கு எதிரான மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்கிறது உத்தரவிட்டு உள்ளது. மேலும் இந்த வழக்கு, கெஜ்ரிவாலுக்கும், மத்திய அரசுக்கும் இடையிலானது அல்ல. கெஜ்ரிவாலுக்கும், அமலாக்கத் துறைக்கும் இடையிலானது. அதனால், நீதிமன்றம் விழிப்புடன் இருக்க வேண்டும்

என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.