டெல்லி

டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கைதான கவிதா ஜாமீனுக்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

தெலுங்கானா முன்னாள் முதல்-மந்திரியும், பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவருமான சந்திரசேகர ராவின் மகளான எம் எல் ஏ கவிதாவை டெல்லி அரசின் மதுபானக் கொள்கையில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இந்த முறைகேட்டில் தொடர்புடையதாக கடந்த மார்ச் 15-ம் தேதி அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.

சிபிஐ அதிகாரிகளும் நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்ட கவிதாவை பணமோசடி வழக்கில் கைது செய்தனர். மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்குகளில் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி கவிதா தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த டெல்லி ஐகோர்ட்டு கவிதாவுக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்தது.

எனவே தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி கவிதா உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, கவிதாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. சுமார் 5 மாதமாக திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கவிதா நேற்று சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.

கவிதா ஜாமீனுக்கு பிறகு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

“மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் நீதி வெல்லும் என்று நான் எப்போதும் நம்புகிறேன். நாங்கள் நிச்சயமாக போராடுவோம்; உறுதியை இழக்க மாட்டோம். நான் போராட்டத்தை முன்னோக்கி கொண்டு செல்வேன்”

என்று கூறியுள்ளார்.