சென்னை: மெரினா கடற்கரையில்  மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் 110 விதியின்கீழ்  முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டடார்.

சட்டப்பேரவையில்  மானிய கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.  இன்று நகராட்சி நிர்வாகம், குடிநீர், ஊரக வளர்ச்சித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது.

இன்றைய விவாதத்தின்போது, முதல்வர் மு.க.ஸ்டாலின் விதி எண் 110ன் கீழ்  முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி,  மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதிக்கு மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் நினைவிடம் அமைக்கப்படும் என்று அறிவித்தார். ரூ.39 கோடி செலவில், 2.23 ஏக்கரில் நினைவிடம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளதாகவும், அது,  கருணாநிதியின் வாழ்க்கை, சிந்தனை குறித்து நவீன ஒளி படங்களுடன் அமைய உள்ளதாகவும் கூறினார்.

இந்திய அரசியலை வழிநடத்திய அரசியல் ஞானி கலைஞர்,  13 முறை தொடர்ந்து எம்.எல்.ஏ.வாக இருந்தவர் தோல்வி அவரை தொட்டதே இல்லை; வெற்றி அவரை விட்டதே இல்லை.  ஐந்து முறை முதலமைச்சராக இருந்து தமிழ் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் திட்டத்தை வகுத்தவர் கலைஞர், இன்று நாம் பார்க்கும் தமிழ்நாடு கலைஞர் உருவாக்கியது. தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உரிமை பெற்றுத் தந்தவர் கலைஞர். நவீன தமிழ் நாட்டை உருவாக்கிய சிற்பி தான் கலைஞர் என்றும் கருணாநிதிக்கு ஸ்டாலின் புகழாரம் சூட்டினார்.