சென்னை

கார்த்தி சிதம்பரம்  ரயில்வே அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் மூத்த குடிமக்கள் சலுகையை அமல்படுத்த வலியுறுத்தியுள்ளார்.

சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் ரயில்வே அமைச்சர்அஸ்வினி வைஷ்ணவுக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார்.

அந்தக் கடிதத்தில்.

“ரயில்களில் கொரோனா காலத்துக்கு முன்பு, 60 வயதை கடந்த ஆண் பயணிகளுக்கு 40 சதவீத கட்டண சலுகையும், 58 வயதை கடந்த பெண் பயணிகளுக்கு 50 சதவீத கட்டண சலுகையும் அளிக்கப்பட்டு வந்து இந்த சலுகை, கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்டது.

கடந்த 2021 ஆம் ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் விலக்கப்பட்ட போதிலும், மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை மட்டும் இன்னும் கொண்டுவரப்படவில்லை. எனவே, மூத்த குடிமக்களுக்கான சலுகையை மீண்டும் அமல்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

சென்னை-ஹவுரா மெயிலில் சமீபத்தில் முன்பதிவு பெட்டியில் டிக்கெட் எடுக்காத பயணிகள் ஆக்கிரமித்ததால், முன்பதிவு செய்த பயணிகள் ஏற முடியாமல் போனதை அறிந்து இருப்பீர்கள். இதுபோன்ற சம்பவங்களால் ரயில் பயணம் பாதுகாப்பு இல்லாததாகி வருவதால் தாங்கள் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்”

என்று வலியுறுத்தியுள்ளார்.