சென்னை: காவிரியில் தண்ணீர் திறந்துவிட கர்நாடக காங்கிரஸ் அரசு மறுத்துள்ள நிலையில், தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் எப்போதும்போல மீண்டும் உச்சநீதிமன்றம் செல்வோம் என்று கூறியிருக்கிறார்.

சமீப காலமாக கேரள மற்றும் கர்நாடக மலைப்பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள நீர் நிலைகள் நிரம்பி உள்ளது. தற்போது  காவிரி அணைகளில் 60 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் கூடிய காவிரி ஒருங்காற்றுகுழு தமிழ்நாட்டுக்கு தினசரி ஒரு  டிஎம்சி தண்ணீர் திறந்து விட கர்நாடக மாநில அரசுக்கு உத்தரவிட்டு உள்ளது. ஆனால், அதை ஏற்க கர்நாடக காங்கிரஸ் அரசின் முதல்வர் சித்தராமையா, துணைமுதல்வர் டிகே சிவகுமார் மறுத்து வருகின்றனர்.  இதனால், தமிழ்நாட்டின் விவசாயம் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.  தமிழக  அணைகளில் 28 சதவீதம் அளவுக்கு நீர் இருப்பு பற்றாக்குறையாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். அதன்படி,யே ஒருங்காற்று குழுவும் உத்தரவிட்டு உள்ளது.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், எப்போதும் போல காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் செல்வோம் என்று கூறி உள்ளார்.

காவிரியில் தினமும் ஒரு டிஎம்சி நீர் இந்த மாதம் (ஜூலை) இறுதி வரை வழங்க வேண்டும் என்று கர்நாடகாவிற்கு காவிரி நீர் ஒழுங்காற்று குழு உத்தரவிட்டுள்ளது. இந்த ஒழுங்காற்று குழு என்பது தமிழ்நாடு குழு அல்ல. தமிழகம், கர்நாடகம் என 2 மாநிலத்திற்கும் பொதுவான குழு. இது சுப்ரீம் கோர்ட்டால் அமைக்கப்பட்ட குழு. இந்த குழு கர்நாடக அணைகளில் உள்ள மொத்த நீர் இருப்பை கணக்கெடுத்து கர்நாடகத்தின் தேவைக்கு போக தமிழ்நாட்டுக்கு நாள் ஒன்றுக்கு ஒரு டிஎம்சி வீதம் தண்ணீர் வழங்க உத்தரவிட்டு உள்ளது.

இந்த உத்தரவை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று கர்நாடக அரசு சொல்வது சிறுபிள்ளைகள் விளையாடுகிறபோது அழுகுணி ஆட்டம் ஆடுவதுபோல் இருக்கிறது. இதே ஒழுங்காற்று குழு தமிழ்நாட்டுக்கு கூட பாதகமாக பலமுறை கருத்து சொல்லி இருக்கிறது. சுப்ரீம் கோர்ட்டால் உருவாக்கப்பட்ட ஒழுங்காற்று குழுவின் உத்தரவை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று சொல்வது சுப்ரீம் கோர்ட்டின் ஆணையை எதிர்த்து சொல்வது போன்றதாகும்.

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு எதிர்ப்பு சொல்வது அரசியல் சட்டத்தை மீறும் செயலாகும். சுப்ரீம் கோர்ட்டு கர்நாடகத்திற்கு மட்டும் சொந்தமானது அல்ல. இந்தியா முழுமைக்கும் பொதுவானது. தமிழ்நாட்டுக்கும், சுப்ரீம் கோர்ட்டு செல்வதற்கு வழி தெரியும்.

இந்த விவகாரத்தில் பிரச்சனை எழாமல் இருக்க ஒழுங்காற்று குழுவின் உத்தரவை ஏற்று நடைமுறைப்படுத்துவதுதான் அண்டை மாநிலங்களுக்கு இடையே நட்புறவை பலப்படுத்துவதாக இருக்கும். இது தெரியாதவரல்ல கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா. அதுபோலவே நீர்வளத்துறை மந்திரி டி.கே.சிவக்குமாருக்கும் இது நன்றாக தெரியும் என்று அ மைச்சர் துரைமுருகன் கூறினார்.

கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி கர்நாடகாவில் நடைபெற்ற வரும்போது, அங்குள்ள முதல்வரை தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேசி, தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட அனுமதி கோருவதை விட்டுவிட்டு, உச்சநீதிமன்றத்தை நாடுவோம் என ஒவ்வொரு முறையும் கூறி வருவது விவசாயிகளை ஏமாற்றும் செயலாகவே தெரிகிறது.

முன்னதாக, இதுகுறித்து கூறிய கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா,  தற்போது காவிரி அணைகளில் 60 டி எம் சி நீர் இருப்பு உள்ளது. இது எங்களுடைய விவசாய பணிகளுக்கு தேவைப்படுகிறது. அதனால் இந்த மாத இறுதி வரை தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது. அதே நேரத்தில் கடந்த 3 நாட்களாக கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்த உத்தரவை எதிா்த்து காவிரி மேலாண்மை ஆணையத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளோம். மேலும் தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பது குறித்து ஆலோசிக்க நாளை (ஞாயிற்றுக்கிழமை) அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டுவது என்று தீர்மானித்துள்ளோம் என்று முதல்-மந்திரி சித்தராமையா கூறி உள்ளார்.

கர்நாடக அரசின் இந்த முடிவு தமிழக விவசாயிகள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.