சென்னை: வடமாநிலங்களில் இருமல் மருந்து குடித்த 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தில், கோடம்பாக்கத்தில் தங்கியிருந்த கோல்ட்ரிப் உரிமையாளர் ரங்கநாதனை மத்திய பிரதேச போலீசார் கைது செய்தனர்.

குழந்தைகளுக்கான இருமல் சிரப்- கோல்டு ரிப் குடித்த குழந்தைகள் பலர் வடமாநிலங்களில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் 20 குழந்தைகள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
‘கோல்ட்ரிப்’ இருமல் மருந்தில், குழந்தைகளின் சிறுநீரக செயழலிப்புக்கு காரணமாக கூறப்படும் இருமல் மருந்தில், பெயின்ட், மை போன்றவை தயாரிக்க பயன்படுத்தப்படும் ‘டை எத்திலீன் கிளைசால்’ என்ற ரசாயன வேதிப்பொருள் இருந்ததும் கண்டறியப்பட்டது.
இதையடுத்து முதல் கட்டமாக தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் கோல்ட் ரிப் இருமல் மருந்துக்கு தடை விதிக்கப்பட்டது . தொடர்ந்து நாடு முழுதும் அம்மருந்து பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது
இந்த நிலையில், இந்த இருமல் மருந்து, தமிழ்நாட்டின், காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில் செயல்படும், ‘ஸ்ரீசென் பார்மா’ நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டு வருவதுதெரிய வந்தது. இதையடுத்து ‘கோல்ட்ரிப்’ மருந்து நிறுவன உரிமம் ரத்து செய்யவும் சட்ட நடவடிக்கைக்கும் மருந்து கட்டுப்பாட்டு துறை பரிந்துரை செய்துள்ளது. மேலும் சில்லரை விற்பனை கடைகளில் இருந்தும் பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த மருந்தை மக்கள் பயன்படுத்துவதை தவிர்க்கும் வகையில், அவற்றை பறிமுதல் செய்து, சென்னையில் உள்ள மருந்து கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கும்படி, மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து மருந்து தயாரிப்பு ஆலை உரிமையாளர் ரங்கநாதனை கைது செய்ய போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் இன்று (அக் 09) கோடம்பாக்கத்தில் ஒருவரது வீட்டில் தங்கியிருந்த கோல்ட்ரிப் உரிமையாளர் ரங்கநாதனை மத்திய பிரதேச போலீசார் கைது செய்தனர்.
https://patrikai.com/tamil-nadu-bans-coldrif-cough-syrup-after-death-of-eight-children-in-madhya-pradesh-rajasthan/