சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு எண்ணிக்கை 36ஆக உயர்ந்துள்ள நிலையில், திமுக அரசின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து, மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெறும் என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்து உள்ளார். அதன்படி ஜூன் 22ந்தேதி போராட்டம் நடைபெறும் என குறிப்பிட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த 36பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்ட 125-க்கும் மேற்பட்டோர் புதுச்சேரி, சேலம் உள்பட பல்வேறு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  அவர்களின் பலரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்த கொடுமையான சம்பவத்துக்கு தமிழக அரசியல் கட்சிகள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. இந்த  நிலையில்,  திமுக அரசை கண்டித்து,   வரும் 22-ந்தேதி பா.ஜ.க. சார்பில்,  மாநில தழுவிய  ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பாஜக  மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கள்ளக்குறிச்சியில், கள்ளச்சாராயத்தினால் 35க்கும் அதிகமான உயிர்கள் பறிபோயிருக்கின்றன என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. கள்ளக்குறிச்சிக்கு நேரில் சென்று, உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரையும், மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களையும் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க உள்ளோம். அவர்கள் குடும்பத்தினருக்கு தமிழக பா.ஜ.க. எப்போதும் உறுதுணையாக இருக்கும்.

திமுக ஆட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளில் நடைபெற்றுள்ள கள்ளச்சாராய உயிரிழப்புகள், 1980 காலகட்டத்தில் ஏற்பட்டதைப் போல, தமிழகம் நாற்பது ஆண்டுகள் பின்னோக்கிச் செல்கிறதா என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.

நேற்றைய தினம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சரை பதவி விலக்கம் செய்ய, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கேட்டுக் கொண்டிருந்தோம். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 60 உயிர்கள் கள்ளச்சாராயத்தினால் பறிபோனதற்குப் பின்னரும், முதலமைச்சராகத் தொடர தனக்குத் தார்மீக உரிமை உள்ளதா என்பதை, அவர் எண்ணிப் பார்க்க வேண்டும்.

தமிழகம் முழுவதும் கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்காமல், பல உயிர்கள் பலியாகும் வண்ணம், தொடர்ந்து மெத்தனப் போக்கில் செயல்பட்டு வரும் திமுக அரசின் கையாலாகாத்தனத்தைக் கண்டித்து, வரும் ஜூன் 22 அன்று, தமிழக பா.ஜ.க. சார்பாக, மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்பதை அறிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு கூறி யுள்ளார்.