புதுச்சேரி: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் சிகிச்சையில் உள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கடந்த மாதம் 18ந்தேதி,  சில நாட்களுக்கு முன்பு கண்ணுக்குட்டி என்பவர்  விற்பனை செய்த  கள்ளச்சாராயம் அருந்திய இரு நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 5 பெண்கள் உட்பட 66 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும், 12 பேருக்கு கண்பார்வை முழுமையாக பறிபோய் உள்ளது. ஆபத்தான நிலையில் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், புதுச்சேரி ஜிப்மர் அரசு மருத்துவமனையில்  இன்னும் சிலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. மேலும் வழக்குகளும் போடப்பட்டு உள்ளது. ஆனால், அதை ஏற்க தமிழ்நாடு அரசு மறுத்து வருவதுடன், சிபிசிஐடி  விசாரணை மற்றும் ஒருநபர் ஆணையம் அமைத்து விசாரித்து வருகிறது. இந்த கள்ளச்சாராய வழக்கில், இதுவரை   21 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்,  புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிவராமன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.   இன்னும் சிலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.