டெல்லி: நீதிபதிகள் ஓய்வுக்குப்பின் அரசுப்பதவிகளை பெறுவது நீதித்துறையின் மீதான நம்பிக்கையை குறைக்கிறது என்றும், தான் ஓய்வுபெற்ற பிறகு எந்தவொரு அரசு பதவியையும் பெறமாட்டேன் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தெரிவித்துள்ளார்.

பொதுவாக ஓய்வுபெற்ற நீதிபதிகளை மாநில அரசுகள் மற்றும் மத்தியஅரசுகள் மீண்டும்  அவர்களுக்கு ஏதாவது ஒரு பொறுப்பு கொடுத்து பயன்படுத்தி வருகிறது. இதனால், நீதிபதிகள் மீதும், அவர்கள் வழங்கும் தீர்ப்புகள் மீதும் விமர்சனங்கள் எழுகின்றன.

இந்த நிலையில்,   நீதிபதிகள் அரசு பதவிகளை ஏற்றுக்கொள்வது அல்லது ஓய்வு பெற்றவுடன் தேர்தலில் போட்டியிடுவது நீதித்துறையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என உச்சநீதிமன்ற  தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் உச்சநீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக பூஷன் ராமகிருஷ்ண கவாய் பொறுப்பேற்றார்.  இவர்  பதவியேற்றத்தில் இருந்து அரசியலமைப்பு சட்டத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி பேசி வருகிறார். இந்த நிலையில்,  நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கவாய்,  நான் ஓய்வுக்குப்பின் ஒருபோதும் அரசுப்பதவிகளை ஏற்க மாட்டேன் என்று  தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற வட்டமேசை விவாதத்தில் பேசிய பி.ஆர்.கவாய், “நீதிபதிகள் ஓய்வு பெற்றவுடன் அரசுப் பதவிகளை ஏற்றுக்கொள்வது, தேர்தலில் போட்டியிடுவது போன்ற செயல்கள் நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கையை குறைக்கிறது. நான் ஓய்வுக்குப்பின் ஒருபோதும் அரசுப்பதவிகளை ஏற்க மாட்டேன் என உறுதி எடுத்துள்ளேன்” என்று தெரிவித்தார்.