கோவை

ன்று நடந்த கோடநாடு கொலை,  கொள்ளை வழக்கு விசாரணைக்கு ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன் ஆஜராகி உள்ளார்.

2017 ஆம் வருடம் ஏப்ரல் 23ஆம் தேதி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட் பங்களாவில் நடந்த பயங்கர கொள்ளை சம்பவத்தில் காவலாளி ஓம் பகதூர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு மற்றொரு காவலாளி கிருஷ்ண பகதூர் பலத்த காயமடைந்தார். இதுவரை இந்த வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முக்கிய குற்றவாளியான கனகராஜ் கார் விபத்தில் உயிரிழந்தார். தற்போது, சிறப்பு புலனாய்வுக் குழு இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வருகிறது.

இன்று, ஜெயலலிதாவின் முன்னாள் உதவியாளர் பூங்குன்றன் இன்று கோவை காந்திபுரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானார்.  ஏற்கனவே, கடந்த மார்ச் மாதம் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் வி.என். சுதாகரன் மற்றும் அவரது முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகள், சயான் உள்ளிட்ட பலரிடம் சிறப்பு புலனாய்வுக் குழு தீவிர விசாரணை மேற்கொண்டது.

பங்களாவில் இருந்ததாகக் கூறப்படும் கோடிக்கணக்கான ரூபாய் மற்றும் மதிப்புமிக்க பொருட்கள் குறித்து அவர்களிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன. இந்த வழக்கில் இதுவரை 250க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. குற்றவாளிகளின் தொலைபேசி உரையாடல்கள் மற்றும் மின்னணு சாதனங்களில் உள்ள தகவல்களை ஆய்வு செய்வதற்காக இண்டர்போல் இன் உதவியை நாடியுள்ளனர்.

இவ்வழக்கில் கூடுதல் சாட்சிகளையும் விசாரிக்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. அதன்படி ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக இருந்த கணியன் பூங்குன்றன் இன்று விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். அவரிடம் பங்களாவில் கொள்ளை போன பொருட்கள் குறித்து விசாரணை நடைபெறலாம் என தெரிய வந்துள்ளது..

ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை எப்போதும் பரபரப்பாக காணப்பட்ட பூங்குன்றன், அவரது மறைவுக்குப் பிறகு அமைதியாக அரசியலிலிருந்தும் ஆட்சியாளர்களிடமிருந்தும் ஒதுங்கி தற்போது தஞ்சாவூர் அருளானந்த நகரில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்து விவசாயம் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறார்.