இடஒதுக்கீடு வழங்க இந்திய அரசியலமைப்பு சட்டம் திருத்தப்படும் என்று நான் கூறியதாக சொல்வதில் உண்மையில்லைஎன்று கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் கூறியுள்ளார்.

முஸ்லிம்களுக்கு 4% இடஒதுக்கீடு வழங்க அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யப்போவதாக டி.கே. சிவகுமார் கூறியதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு இன்று (திங்கட்கிழமை) மக்களவையில் தெரிவித்தார். இதனால் காங்கிரஸ் மற்றும் பாஜக உறுப்பினர்களிடையே மோதல் ஏற்பட்டது.

ரிஜிஜுவின் இந்த பேச்சுக்கு மறுப்பு தெரிவித்துள்ள டி.கே. சிவகுமார் “விரக்தியடைந்த பாஜகவும் அதன் மாநில மற்றும் தேசியத் தலைவர்களும் என் மீதும் காங்கிரஸ் கட்சி மீதும் பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்” என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், “மசோதா விவாதிக்கப்பட்டபோது நான் சட்டமன்றத்தில் இல்லை என்பதை மத்திய அமைச்சருக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாபாசாகேப் அம்பேத்கர் இந்திய அரசியலமைப்பை உருவாக்கியபோது, ​​பாஜகவின் தாய் அமைப்பு அதை எதிர்த்தது.

கடந்த தேர்தல் வரை, பாஜகவுக்கு அரசியலமைப்பை மாற்ற வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதனால்தான் 400 இடங்களை வெல்ல வேண்டும் என்று உறுதியாக இருந்தது.

“இப்போது, ​​தன் பாவத்தை மறைக்க, அவர்கள் என்னையும் காங்கிரஸையும் குறை கூறுகிறார்கள்,” என்று பதிவிட்டுள்ளார்.

“கர்நாடகாவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை அடையாளம் காண்பதற்கான அளவுகோல்களின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தவிர, “காங்கிரஸ் ஐந்து உத்தரவாதங்களை வெற்றிகரமாக செயல்படுத்தியதால் பாஜக ஏமாற்றமடைந்துள்ளது.” உத்தரவாதத் திட்டங்களை எப்படியாவது ரத்து செய்ய வேண்டும் என்று அது விரும்புகிறது. நான் உயிருடன் இருக்கும் வரை அது சாத்தியமில்லை என்று அவர் கூறியுள்ளார்.