சமூக ஊடகங்களுக்கும் ஒழுங்குமுறை விதிகளை கொண்டு வர வேண்டியது அவசியம் என்று சவுக்கு சங்கர் தொடர்பான வழக்கின் தீர்ப்பில் சென்னை உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.

சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை எதிர்த்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் சிவஞானம் அமர்வுக்கு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அரசுக்கு எதிரான கருத்துக்களை தெரிவிப்போருக்கு எதிராக உரிய சட்டங்களின் கீழ் மட்டுமே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், சமூக ஊடகங்கள் வருகைக்குப் பின் அரசின் செயல்பாடுகள் குறித்த விவாதங்கள் அதிகரித்துள்ளது ஆரோக்கியமானது என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள் மக்களின் குறைகளை புரிந்து கொள்ளும் கருவியாக சமூக ஊடகங்கள் உள்ளன. அரசு அதனை முடக்க கூடாது என்று கூறினர்.

”பொது ஒழுங்குக்கு குந்தகம் ஏற்படுத்தியதாக குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அது குறித்த காரணங்கள் உத்தரவில் தெரிவிக்கப்படவில்லை. சவுக்கு சங்கருக்கு எதிராக கூறப்படும் குற்றச்சாட்டுகள் பொது ஒழுங்குக்கு குந்தகம் ஏற்படுத்தும் அளவுக்கு தீவிரமானவையானதாக தெரியவில்லை. குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து உத்தரவு பிறப்பித்ததில் உள்நோக்கம் உள்ளது” எனவும் கூறி அந்த உத்தரவை நீதிபதிகள் ரத்து செய்துள்ளனர்.

மேலும், சமூக ஊடகங்களுக்கும் ஒழுங்குமுறை விதிகளை கொண்டு வர வேண்டியது அவசியம் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் யோசனை தெரிவித்துள்ளனர்.