டெல்லி: இந்திய ரயில்வே உணவு சேவை மற்றும் சுற்றுலா நிறுவன தளத்தில் இணையவழி பேருந்து முன்பதிவுகள் சேவையும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்திய ரயில்வே உணவு சேவை மற்றும் சுற்றுலா நிறுவனமான ஐஆர்சிடிசி தளத்தில் ரயில் மற்றும் விமானப் பயணங்களுக்கான முன் பதிவு சேவை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் தற்போது பேருந்துகள் முன்பதிவு சேவையும் ஐஆர்சிடிசி தளத்தில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஐஆர்சிடிசி மொபைல் செயலியில் பேருந்து முன்பதிவு செய்வதற்கான பணிகள் மார்ச் முதல் வாரத்தில் முழுமையாக நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஐஆர்சிடிசி நிறுவனம் அறிவித்துள்ளது. பின்னர், ஐஆர்சிடிசி செயலியிலும் பேருந்து முன்பதிவுகள் செய்து கொள்ளலாம்.

இந்த சேவைக்காக 22 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் மாநில சாலை போக்குவரத்து மற்றும் தனியார் பேருந்து நிறுவனங்களுடன் கை கோர்த்து உள்ளதாக ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது.