டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு நேற்று நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில், கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட வலியுறுத்தி உள்ளதாக திமுக எம்.பி. டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடா் இன்று தொடங்கி ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தொடரில் பல்வேறு விவகாரங்களை எழுப்ப எதிா்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதனிடையே மழைக்காலக் கூட்டத்தொடருக்கு முன்னதாக அனைத்துக் கட்சிக் கூட்டம் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜுஜு தலைமையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை ) காலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மத்திய அமைச்சா்கள் ஜெ.பி.நட்டா, எல். முருகன் மற்றும் காங்கிரஸ், திமுக, அதிமுக, திரிணாமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ஆம் ஆத்மி, கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த மக்களவை உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். மேலும் திமுக சாா்பில் அக்கட்சியின் மக்களவை தலைவா் டி.ஆா். பாலு, அதிமுக சாா்பில் தம்பிதுரை ஆகியோா் கலந்துகொண்டனா்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்.பி டி.ஆா்.பாலு ‘நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் தொடங்கவுள்ளது. அதில் பேச வேண்டிய பொருள்கள் என்னென்ன? அரசின் பதிலை பெறுவதற்கான கருத்துரைகளை திமுக சாா்பில் கூட்டத்தில் எடுத்துவைத்தோம். அதேபோல் பல்வேறு கோரிக்கைகளை வைத்தோம்.
மிக முக்கியமாக, பாகிஸ்தான் தூண்டுதலின் பேரில் நடைபெற்ற பஹல்காம் தீவிரவாத தாக்குதல் சம்பவம் தொடா்பாக விவாதம் நடத்த கோரிக்கை வைத்தோம்‘ அதேபோல ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையை அமெரிக்க அதிபா் டிரம்ப் கூறிதான் நிறுத்தப்பட்டது என அவா் கூறி வருகிறாா் அதுகுறித்தும் விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளதுடன், ‘ பீகாரில் தீவிரமாக வாக்காளா் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது இது எதிா்கட்சிகளை ஒடுக்கும் நோக்கிலானது. பிகாா் தோ்தல் முடிவுகளை பாதிக்கும் அளவுக்கு, எதிா்க்கட்சிகளை தோற்கடிக்கும் விதமாக பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இது குறித்தும் விவாதிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது என்றார்.
மேலும், தமிழ்நாட்டின் கீழடி அகழ்வாய்வு அறிக்கை மத்திய அரசு முடக்கி வைத்துள்ளது. அதனை வெளியிட வலியுறுத்தி உள்ளோம். மிக முக்கியமாக நாடாளுமன்ற தொகுதி சீரமைப்பு முக்கிய பிரச்னையாக எழுப்பப்படும். ஒரே நாடு ஒரே தோ்தல் தொடா்பான நாடாளுமன ற கூட்டுக்குழு அறிக்கை அவையில் வைக்கலாம் என எதிா்பாா்க்கிறோம், அவ்வாறு வைக்கப்பட்டால் அதுகுறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தினோம். ஒரே நாடு ஒரே தோ்தல் விவகாரதரதில் ஆளும் கட்சிக்கு நாடாளுமன்றத்தில், பெரும்பான்மை உள்ளதால், இந்த விவகாரம் தொடா்பாக உச்சநீதிமன்றம் மூலமாக பிரச்னையை தீா்க்க முடியும், எனவே அது தொடா்பான முயற்சி எடுக்கப்படும்.
இவ்வாறு கூறினார்.