கயானா: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான நான்காவது டி-20 போட்டியிலும் வென்று அசத்தியுள்ளது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி.

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில், பங்கேற்கிறது. இப்போட்டியை ஏற்கனவே இந்திய அணி 3-0 கணக்கில் கைப்பற்றிவிட்டாலும், நான்காவது போட்டியை எளிதாக எடுத்துக்கொள்ளவில்லை இந்திய அணி.

மழையால் இப்போட்டி 9 ஓவர்களாக குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பீல்டிங் செய்ய முடிவெடுத்தது.

அதன்படி களமிறங்கிய இந்திய அணி, 7 விக்கெட்டுகளை இழந்து 9 ஓவர்களில் வெறும் 50 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியின் பூஜா எடுத்த 10 ரன்கள்தான் அதிகபட்ச ரன்களாகும்.

ஆனால், மேற்கிந்திய அணியால் இந்த ரன்களைக்கூட எட்ட முடியவில்லை. அந்த அணியின் இருவர் இரட்டை இலக்க ரன்களை எடுத்தாலும், கடைசியில் 5 விக்கெட்டுகளை இழந்து 9 ஓவர்களில் 45 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன்மூலம் இந்திய அணி 5 ரன்களில் வென்று, தொடரில் 4-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது. வரும் 21ம் தேதி கடைசிப் போட்டி நடைபெறுகிறது. அதிலும் வென்று, மேற்கிந்திய மகளிர் அணியை இந்திய மகளிர் அணி ஒயிட்வாஷ் செய்யுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.