டெல்லி: ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரய்சி மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஈரான் நாட்டின் எட்டாவது அதிபர் இப்ராஹிம் ரெய்சி. அஜர்பைஜான் நாட்டுக்குச் சென்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு திரும்பியபோது, அவர்  பயணித்த ஹெலிகாப்டர் மூடு பணி காரணமாக மலையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஹெலிகாப்பர் முற்றிலும் எரிந்த நிலையில், அதில் பயணம் செய்த 8 பேரும் பலியானதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.  விபத்தில் சிக்கிய நிலையில் ஹெலிகாப்டர்  பாகங்கள் இன்று (திங்கள்கிழமை) அடையாளம் காணப்பட்டன. இந்தச் சூழலில் விபத்தில் அவர் உயிரிழந்து விட்டதாக அந்த நாட்டு ஊடக நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதிபர் ரெய்சி, அங்கிருந்து ஹெலிகாப்டரில் நாடு திரும்பி கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டது. சுமார் 17 மணி நேர தேடுதலுக்குப் பிறகு ஹெலிகாப்டரின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர் முழுவதும் தீயில் கருகி உருக்குலைந்து காட்சி அளிக்கிறது.  ஈரான் அதிபர் இப்ராஹிம் ரய்சி மறைவுக்கு உலக நாடுகள் இரங்கல் தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில் இந்திய பிரதமர் மோடியும், ஈரான் அதிபர் இப்ராஹிம் ரய்சி  மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,  இப்ராஹிம் ரய்சி மறைவால் ஆழ்ந்த வருத்ததும, அதிர்ச்சியும் அடைந்தேன். இப்ராஹிம் ரய்சியின் குடும்பத்தினருக்கும், ஈரான் மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்தியா-ஈரான் இருத்தரப்பு உறவை வலுப்படுத்த அவரது பங்களிப்பு எப்போதும் நினைவுகூரப்படும். இந்த துயரமான நேரத்தில் இந்தியா ஈரானுடன் துணை நிர்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.