கொழும்பு: இலங்கை, யாழ்ப்பாணத்தில் உள்ள பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகத்தை இந்தியாவின் உதவியுடன் மேம்படுத்த இலங்கை அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

பொருளாதார சிக்கலில் மாட்டியுள்ள அண்டை நாடான இலங்கைக்கு இந்தியா பல வழிகளில் உதவிக்கரம் நீட்டி உள்ளது. இலங்கையின் பொருளாதார மீட்சிக்காக அனைத்து வகைகளிலும் இந்தியா உதவி வருகிறது. குறிப்பாக, இலங்கையின் பொருளாதார வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு முக்கிய பொருளாதார துறைகளில் நீண்டகால முதலீடுகளை இந்தியா ஊக்குவித்து வருகிறது. இவை மட்டுமின்றி, இரு தரப்பு வளர்ச்சிக்கான திட்டங்களை இலங்கையில் இந்தியா மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் இலங்கை பொருளாதார பின்னடைவில் இருந்து மீண்டு வருகிறது.
இந்த நிலையில், யாழ்ப்பாணத்தில் உள்ள பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகத்தை மேம்படுத்த இந்தியா முன்வந்துள்ளது. இதற்கு இலங்கை அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியாவுக்கு மிக அருகில், ராமேசுவரம் மற்றும் வேதாரண்யத்திலிருந்து 40 கடல்மைல் தொலைவில் அமைந்துள்ளது பருத்திதுறை மீன்பிடி துறைமகம். இந்த துறைமுகமானது, இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரின்போது விடுதலைப் புலிகளின் கப்பல் படையை வீழ்த்துவதற்காக, அந்நாட்டு ராணுவம் நடத்திய தாக்குதல்களில் பருத்தித்துறை துறைமுகம் சேதமடைந்தது.
முன்னதாக, 1995 ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகளிடம் இருந்து இந்தத் துறைமுகத்தை இலங்கை ராணுவம் கைப்பற்றியது. இந்த துறைமுகத்தை கையகப்படுத்த சீனா முயற்சி மேற்கொண்டு வந்தது. , இலங்கையின் வடமாநிலப் பகுதியில் கடல் அட்டை பண்ணை வளர்ப்பில் கவனம் செலுத்தி வரும் சீனா, பருந்திதுறை துறைமுகத்தை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தால், அது இந்தியாவுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என்பதால், அதற்கு இலங்கை அனுமதி வழங்கக்கூடாது இந்தியா நெருக்கடி கொடுத்தது. இதனால், சீனா பின்வாங்கியது.
இதைத்தொடர்ந்து, இந்தியாவுக்கு மிக அருகில், குறிப்பாக தென்கோடி மாநிலமான தமிழ்நாட்டிற்கு மிக அருகில் உள்ள இந்தத் துறைமுகத்தை மேம்படுத்தத் இந்தியா முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான இந்திய அரசின் கோரிக்கைக்கு இலங்கை அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. அதாவது, இலங்கை அமைச்சரவை பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகத்தை மேம்படுத்தும் பணியை மேற்கொள்ள இந்திய அரசுக்கே ஒப்புதல் அளித்தது.
இந்த நிலையில், பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகத்தின் மேம்பாட்டுத் திட்டம் குறித்து ஆய்வு மேற்கொள்ள இந்தியாவின் கடலோரப் பொறியியல் நிறுவனத்தினர் யாழ்ப்பாணம் சென்றுள்ளனர். அவர்களின் ஆய்வறிக்கையை தொடர்ந்து மேம்படுத்தும் பணி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.