புடாபெஸ்ட்

நேற்று புடாபெஸ்ட் நகரில் நடந்த செஸ் ஒலிம்பிய்ட் 7 ஆவது சுற்றிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் தற்போது45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடந்து வருகிறது. மொத்தம் 11 சுற்றுகள் கொண்ட இந்த தொடரில் ஓபன் பிரிவில் நேற்று நடந்த 7-வது சுற்று ஆட்டத்தில் இந்திய அணி, சீனாவை எதிர்கொண்டது.

வெள்ளை நிற காய்களுடன் ஆடிய இந்திய வீரர் குகேஷ், சீன வீரர் யி வெய்-ஐ வீழ்த்தி வெற்றி பெற்றார்.மேலும்  பிரக்ஞானந்தா, அர்ஜூன் எரிகாசி, ஹரிகிருஷ்ணா ஆகியோர் தங்களது ஆட்டங்களில் டிரா கண்டனர். முடிவில் இந்தியா 2.5 – 1.5 என்ற கணக்கில் சீனாவை வீழ்த்தி 7-வது வெற்றியுடன் முதலிடத்தில் உள்ளது.

பெண்கள் பிரிவில் நடந்த 7-வது சுற்றில் ஆட்டத்தில் இந்திய அணி, ஜார்ஜியாவுடன் மோதியது. இதில் கருப்பு நிற காய்களுடன் ஆடிய இந்திய வீராங்கனை வந்திகா அகர்வால் 46-வது காய் நகர்த்தலில் பெலா கோடெனாஷ்விலியை தோற்கடித்தார்.

இந்திய வீராங்கனை வைஷாலி, ஜாவாகிஷ்விலியை வீழ்த்தினார். ஹரிகா, திவ்யா தேஷ்முக் தங்களது ஆட்டங்களை டிரா செய்தனர். முடிவில் இந்தியா 3-1 என்ற கணக்கில் ஜார்ஜியாவை வீழ்த்தி 7 ஆவது வெற்றியுடன் முதலிடத்தில் உள்ளது.