சென்னை: மாநில அரசுகளைத் தண்டிப்பதன் வழியாக இந்தியா வளர்ச்சி பெற முடியாது என  முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி குறைப்பு செப்டம்பர் 22ந்தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன்மூலம் மாநில மற்றும் மத்தியஅரசுகளின் வருமானம் பெருமளவில் குறைந்துள்ளது. இதனால், பல மாநில அரசுகள், தங்களுக்கு மத்தியஅரசு நிவாரணம் அளிக்க வேண்டும் என கூறி வருகின்றனர். ஆனால், பிரதமர் மோடியோ, இந்த வரி குறைப்பு மூலம் பொதுமக்கள் ரூ.2.5 லட்சம் கோடி சேமிக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில்,  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கூறி இருப்பதாவது:- “ஜி.எஸ்.டி. வரிக்குறைப்பாலும் வருமான வரி விலக்குக்கான உச்சவரம்பை உயர்த்தியதாலும் இந்தியர்கள் 2.5 லட்சம் கோடி ரூபாயைச் சேமிக்கலாம்” என பிரதமர் மோடி கூறி உள்ளார். இதைத்தானே தொடக்கத்தில் இருந்தே எதிர்க்கட்சிகளான நாங்கள் வலியுறுத்தி வந்தோம்.

8 ஆண்டுகளுக்கு முன்பே இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால், இந்தியக் குடும்பங்கள் இன்னும் பல கோடி ரூபாயை எப்போதோ சேமித்திருக்குமே?

மேலும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வரிக்குறைப்பில் சரிபாதி அளவு மாநில அரசுகளின் பங்கிலிருந்துதான் செய்யப்படுகிறது.

இந்த உண்மையை ஒன்றிய அரசு மறைப்பதாலும் பாராட்ட மறுப்பதாலும் இதனைச் சுட்டிக்காட்ட வேண்டியது எனது கடமையாகிறது. மற்றொரு புறம், ஒன்றிய பா.ஜ.க. அரசு மாநிலங்களுக்கு நியாயமாகச் சேர வேண்டிய நிதியைத் தர மறுத்து வருகிறது.

இந்தித் திணிப்பை ஏற்க மறுக்கும் ஒரே காரணத்துக்காக, ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்கீழ் தமிழ் நாட்டுக்கு வழங்க வேண்டிய நிதி மறுக்கப்படுகிறது. இந்த அநீதி எப்போது முடிவுக்கு வரும்?

தங்கள் உரிமைகளைப் பாதுகாத்து, தம் மக்களுக்காக முன்நிற்கும் மாநில அரசுகளைத் தண்டிப்பதன் வழியாக இந்தியா வளர்ச்சி பெற முடியாது.

கூட்டாட்சிக் கருத்தியலுக்கு மதிப்பளியுங்கள், உரிய நிதியை விடுவியுங்கள், மக்களுக்கு நியாயமாகச் சேர வேண்டியதைத் தந்து அவர்களைப் பயனடைய விடுங்கள்!

இவ்வாறு  பதிவிட்டுள்ளார்.