டெல்லி

ரும் 1 ஆம் தேதி டெல்லியில் இந்தியா கூட்டணி தலைவர்கள் மத்தியில் ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.

நாடெங்கும் நடந்து வரும் நாடாளுமன்ற தேர்தல் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது.  இதுவரை மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 486 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு விட்டது. வரும் 1-ந் தேதி இறுதியாக 7-வது கட்டமாக 57 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட இருக்கிறது.

இதைத் தொடர்ந்து 4-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். அன்று மதியம் மத்தியில் ஆட்சியை பிடிப்பது யார் என்பது உறுதியாகி விடும். மொத்தம் உள்ள 543 நாடாளுமன்ற இடங்களில் 272 இடங்களை பெறும் கட்சி ஆட்சி அமைக்கும்.

மத்தியில் யார் ஆட்சி அமையும் என்பதில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. வரும் 1 ஆம் தேதி இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் டெல்லியில் கூடி ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளனர். கூட்டணியில் ள்ள காங்கிரஸ், தி.மு.க., சமாஜ்வாடி, தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, ராஷ்டிரீய லோக்தளம் உள்பட 28 கட்சிகளின் தலைவர்களுக்கும் வரும் 1 ஆம் தேதி நடக்கும் கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

இந்தக் கூட்டத்தில் 7 கட்ட தேர்தலில் இந்தியா கூட்டணி கட்சிகள் எப்படி செயலாற்றி உள்ளன என்பது பற்றி ஆய்வு செய்து தேர்தல் முடிவுகள் எப்படி அமையும் என்பது பற்றியும் விவாதிக்க இருக்கிறார்கள். மேலும் தேர்தல் முடிவுகளை பொறுத்து அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது பற்றியும் கூட்டத்தில் முடிவு செய்ய இருக்கிறார்கள்.

குறிப்பாக மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் எப்படி ஒருங்கிணைந்து செயல்படுவது என்பது பற்றியும் பிரதமர் தேர்வு பற்றியும் கூட்டத்தில் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே வரும் 1 ஆம் தேதி நடைபெற உள்ள இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.