கராச்சி:

‘‘பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இருந்தாலும் இந்தியாவில் விளையாட தயாராக இருக்கிறோம்’’என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

எல்லையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தொடர் தாக்குதலை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறுவதில் சிக்கல் நீடிக்கிறது. 2014ம் ஆண்டு இருநாட்டு கிரிக்கெட் வாரிய புரிந்துணர்வு ஒப்பந்தப்படி, இந்தியா பாகிஸ்தானுக்கு எதிரான 6 தொடரில் விளையாட வேண்டும்.

இதில் 4 போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெற இருந்தது. ஆனால் இந்த விவகாரம் மத்திய அரசின் ஒப்புதலின் கீழ் உள்ளது. இந்த ஒப்பந்தத்தை மதிக்க தவறியதாக இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு பாகிஸ்தான் நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில் ‘‘பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இருந்தாலும் நாங்கள் இந்தியாவில் விளையாட தயார்’’ என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு அச்சுறுத்தல் இருந்தாலும் விளையாட்டு போட்டி நடைபெற வேண்டும் என வலியுறுத்துவதாகவும், இந்தியாவில் விளையாட எங்கள் நாட்டு வீரர்களை அனுப்ப தயாராக உள்ளோம் எனவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் சகார்யார் கான் கூறுகையில், “நாங்கள் இந்தியாவில் விளையாட தயாராக உள்ளோம், இருப்பினும் சொந்த நாட்டிலேயே பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய வீரர்களை விளையாட விட இந்திய கிரிக்கெட் வாரியம் தயாராக இல்லை,” என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ‘‘ அதிகமான வருவாயை கொடுப்பதில் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டிகள் மிகவும் முக்கியமானது என சர்வதேச கிரிக்கெட் வாரியமே ஏற்றுக் கொண்டுள்ளது. நாங்கள் எங்கள் திட்டங்களில் சரியாக இருக்கிறோம். ஆனால் இந்தியாவுக்கு எதிரான போட்டிகளை விளையாடாதது எங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது” என சகார் சகார்யார் கான் தெரிவித்துள்ளார்.