சென்னை: சென்னையில், ரயில் தண்டவாளத்தை, அதற்கு உரிய இடங்களில் கடக்காமல், இடையே கடந்ததாக 8 மாதங்களில் 944 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது. விதிகளை மீறி ரயில்வே தண்டவாளத்தை கடந்தபோது ரயிலில் அடிபட்டு 228 பேர் உயிரிழந்துள்ளதும் தெரிய வந்துள்ளது.

நடப்பாண்டில் ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை 8 மாதங்களில் ரயில் தண்டவாளத்தை அத்துமீறி கடக்க முயன்றது தொடர்பாக, 944 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.4.45 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.
சென்னை ரயில்வே கோட்டம் தமிழகத்தின் வடமாவட்டங்கள் மற்றும் தெற்கு ஆந்திரா வரை ரயில்வே எல்லையாகவும், மொத்தம் 697.92 கி.மீ. நீளம் வரை இதன் பாதையாகவும் உள்ளது. சென்னை கோட்டத்த்தில் மட்டும், அதாவத, சென்னையில், கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு, சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் மற்றும் கும்மிடிப்பூண்டி, கடற்கரை – வேளச்சேரி ஆகிய பிரதான வழித் தடங்களில், தினமும் 630-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்களின் சேவை இயக்கப்படுகின்றது. இதுதவிர, 150-க்கும் மேற்பட்ட விரைவு ரயில்களும் இயக்கப்படுகின்றன.
ரயில் போக்குவரத்து அதிகம் உள்ள இவ்வழித் தடங்களில், தண்டவாளத்தை கடக்கும் நபர்கள் சிலர் அவ்வப்போது ரயிலில் அடிபட்டு இறக்கும் சம்பவம் நடைபெறுகிறது. இதன் காரணமாக, ரயில் தண்டவாளத்தில் அத்துமீறி நுழைந்து, கடக்க முயல்வது போன்றவை தடை செய்யப்பட்டு உள்ளது. தண்டவாளங்களை கடக்க மேம்பாலங்கள் அல்லது, அதற்கு உரிய இடங்களில் மட்டுமே கடக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
ஆனால், பயணகள் சில அவசர காரணங்களால், விதிகளை மீறி ரயில் தண்டவாளங்களை கடந்து செல்கின்றனர். இதன் காரணமாக பலர் ரயிலில் அடிபட்டு இறந்துபோகும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. முதல் ஆகஸ்ட் வரை 8 மாதங்களில் ரயிலில் அடிப்பட்டு 228 பேர் உயிரிழந்துள்ளனர். 34 பேர் காயமடைந்துள்ளனர். இதை தடுக்கவே ரயில் தண்டவாளங்களை கடந்து செவ்பவர்களை ரயில்வே காவல்துறை கைது செய்து வருகிறது.
இந்த நிலையில், நடப்பாண்டில் ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை, சென்னை கோட்டத்தில் ரயில் தண்டவாளத்தில் அத்துமீறி நுழைந்து, கடக்க முயன்ற 944 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது, வழக்கு தொடரப்பட்டு, ரூ.4 லட்சத்து 45 ஆயிரத்து 600 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கூறிய ரயில்வே அதிகாரிகள், அனைத்து பயணிகள் மற்றும் பொதுமக்களும் ரயில் தண்டவாளங்களைக் கடப்பதைத் தவிர்க்க வேண்டும். ஒரு நொடி கவனக் குறைவுகூட ஈடுசெய்ய முடியாத சோகத்தை ஏற்படுத்தக் கூடும். பொதுமக்கள் தங்கள் அன்புக்குரியவர்களின் பாதுகாப்புக்காக நடைமேம்பாலங்கள், லெவல் கிராசிங்குகள், சுரங்கப் பாதைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.