டெல்லி

ராகுல் காந்தி எந்த தொகுதியில் இருந்து ராஜினாமா செய்வார் என்பது குறித்து இன்னும் 4 நாட்களில் காங்கிரஸ் அறிவிக்க உள்ளது.

நாடு முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தல் முடிவுகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி  293 தொகுதிகளிலும், இந்தியா கூட்டணி 232 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இதில் பாஜக மட்டும் தனித்து 240 தொகுதிகளிலும், காங்கிரஸ் மட்டும் தனித்து 99 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

ஆட்சியமைப்பதற்கு 272 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்ற நிலையில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனவே, மத்தியில் கூட்டணி ஆட்சி அமையும் நிலை ஏற்பட்டுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதாதளமும், தெலுங்கு தேசமும் பாஜகவுக்கான தங்களது ஆதரவை உறுதிபடுத்தியதையடுத்து, மத்தியில் மீண்டும் பாஜக தலைமையிலான ஆட்சி அமையவுள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி மற்றும் கேரள மாநிலம் வயநாட்டில் என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல் காந்தி இரண்டிலுமே அபார வெற்றி பெற்றார்.

இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதால் ஒரு தொகுதியை கட்டாயமாக அவர் ராஜினாமா செய்தாக வேண்டும்.ராகுல் காந்தி ராஜினாமா செய்த தொகுதிக்கு தேர்தல் ஆணையம் இடைத் தேர்தல் நடத்தும்.

கடந்த முறை வயநாடு எம்பியாக செயல்பட்ட ராகுல் காந்தி இந்த முறை வயநாட்டி எம்பியாகவே தொடர்வாரா? அல்லது வயநாட்டை ராஜினாமா செய்துவிட்டு ரேபரேலி தொகுதி எம்பியாக செயல்படுவாரா? என கேள்விகள் எழுந்துள்ளது.

காங்கிரச் பொதுச் செயலர் கேசிவேணுகோபால் 18வது மக்களவை கூட்டத் தொடர் வருகிற ஜூன் 18ம் தேதி தொடங்க உள்ள நிலையில் ராகுல் காந்தி ராஜினாமா செய்யும் தொகுதி குறித்து அடுத்த நான்கு நாட்களுக்குள் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.