சபரிமலை

வரும் 10 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

தற்போது சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது.  வரும் 15 ஆம் தேதி மகர விளக்குப் பூஜை நடக்கிறது. சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கூட்டம் அலைமோதுகிறது.

எனவே பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில், உடனடி தரிசன முன்பதிவை நிறுத்தி வைக்கவும், வருகிற 14, 15 ஆம் தேதிகளில் ஆன்லைன் தரிசனத்திற்கான முன்பதிவு எண்ணிக்கையைக் குறைக்க வலியுறுத்தியும் பத்தனம் திட்டா மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு அரசுக்கும், திருவிதாங்கூர் தேவஸ்தானத்திற்கும் கடிதம் எழுதி இருந்தார்.

நேற்று தேவஸ்தான அமைச்சர் ராதாகிருஷ்ணன் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தேவஸ்தான தலைவர் பிரசாந்த், உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து தேவஸ்தான தலைவர் பிரசாந்த்,

“சபரிமலைக்கு மகரவிளக்கையொட்டி வரும் பக்தர்களின் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் வருகிற 10 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை உடனடி தரிசன முன்பதிவு ரத்து செய்யப்படுகிறது.  14 அம் தேதி தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவை 50 ஆயிரமாகவும், 15 ஆம் தேதி 40 ஆயிரமாகவும் குறைக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

இந்தநாட்களில் பெண்கள், குழந்தைகள் சபரிமலைக்கு வருவதைத் தவிர்ப்பது நல்லது.

ஏற்கனவே மண்டல பருவத்தில் பக்தர்களுக்கு ஏற்பட்ட சிரமத்தைக் கருத்தில் கொண்டு இந்த கட்டுப்பாடு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. அதே வேளையில் 16 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை இணையம் முன்பதிவு மற்றும் உடனடி தரிசன முன்பதிவு ஆகியவை வழக்கம்போல் எவ்வித கட்டுப்பாடும் இன்றி நடைபெறும்”

என்று தெரிவித்துள்ளார்.