பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி மூன்று வாரங்களை கடந்து வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. விஜய் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10:00 மணிக்கும் சனி மற்றும் ஞாயிறுகளில் இரவு 9:30 மணிக்கும் ஒளிபரப்பாகிற பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி இம்முறையும் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வருகிறது. அதில் மொத்தம் 18 போட்டியாளர்கள் உள்ளே நுழைந்தனர்.

1. மதுமிதா (ஆடை வடிவமைப்பாளர்)
2. இசைவாணி (கானா பாடகி)
3. அபிஷேக் (விமர்சகர்)
4. ராஜு ஜெயமோகன் (சீரியல் நடிகர்)
5. பிரியங்கா தேஷ்பாண்டே (தொகுப்பாளினி)
6. அபினய் வட்டி (நடிகர்)
7. சின்னப்பொண்ணு (நாட்டுப்புற பாடகி)
8. பவானி ரெட்டி (சீரியல் நடிகை)
9. நாடியா சாங் (மலேஷியாவை சேர்ந்த மாடல் அழகி)
10. இமான் அண்ணாச்சி (நகைச்சுவை நடிகர்)
11. வருண் (நடிகர்)
12. ஐக்கி பெரி (ராப் பாடகி)
13. அக்‌ஷரா ரெட்டி (மாடல் அழகி)
14. நிரூப் நந்தகுமார் (நடிகர்)
15. நமீதா மாரிமுத்து (மாடல் அழகி)
16. சிபி சந்திரன் (மாஸ்டர் பட நடிகர்)
17. சுருதி ஜெயதேவன் (மாடல் அழகி)
18. தாமரைச் செல்வி (நாடக கலைஞர்)

இதில் தனிப்பட்ட காரணங்களால் நமீதா மாரிமுத்து, நிகழ்ச்சியை விட்டு வெளியேற, 17 போட்டியாளர்கள் இருந்தனர். இதையடுத்து நாடியா சங், அபிஷேக் ராஜா இருவரும் அடுத்தடுத்த இரண்டு வாரங்களில் வீட்டை விட்டு வெளியேற்றப்பட, பாடகி சின்னப்பொண்ணு கடந்த ஞாயிற்றுக் கிழமை பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

இந்நிலையில் நிலத்தின் ஆற்றலை சொந்தமாக்கிய நிரூப், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருக்கிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியை கலகலப்பூட்டும் வகையில் டான்ஸ் டாஸ்க் வழங்கப்படுகிறது. “சினிமா சினிமா” என்ற பெயரில் தொடங்கும் இந்த டாஸ்கில், ஹவுஸ் மேட்ஸ்களுக்கு தனித்தனி கதாபாத்திரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் சிபிக்கு – ரஜினிகாந்த், வருண் – சிட்டி ரோபோ, இசைவாணி – சந்திரமுகி, ஸ்ருதி – ஜெனிலியா, அக்ஷ்ரா – நீலாம்பரி, பாவ்னி – கஜினி, பிரியங்கா – காண்ட்ராக்டர் நேசமணி, மதுமிதா – 23ம் புலிகேசி, அபினய் – தெய்வத்திரு திரைப்பட கிருஷ்ணா, நிரூப் – அம்பி, தாமரை – கனகா, ராஜு – எம்.ஆர். ராதா, இமான் – நடிகர் திலகம் சிவாஜி கதாபாத்திரங்களும் கொடுக்கப்பட்டிருந்தது.

நேற்று ஸ்ருதி, பாவ்னி, மது உத்தரவை மீறியதால் அவர்களை பச்சை மிளகாய் மற்றும் பாகற்காய் சாப்பிட வைத்தார் நிரூப் . இதன் தொடர்ச்சியாக பாவ்னி இன்று இரவு வெளியே தூங்க வேண்டும் என நிரூப் கூறுவதும் அதற்கு காரணம் கேட்டு பாவ்னி சண்டை போடும் காட்சிகளும் இன்றைய முதல் ப்ரோமோவில் இருந்தது.

இரண்டாவது ப்ரோமோவில், “சினிமா சினிமா” டாஸ்கில் யாரெல்லாம் சிறப்பாக செயல்படவில்லை என பிக் பாஸ் கேள்வி எழுப்புகிறார். அதில் இமான், அக்ஷ்ராவை கூறுகிறார். ஒரு வேலை அக்ஷ்ரா, நீலம்பரி கதாபாத்திரத்தை பார்க்கவில்லையா? அந்த படம் குறித்து தெரியவில்லையா என்பது குறித்து எனக்கு தெரியவில்லை என இமான் கூறுகிறார். அப்போது குறுக்கிடும் சிபி, இல்லை அக்ஷ்ரா அவரது கதாபாத்திரத்தை நன்றாக செய்தார் என்கிறார். ஆனாலும் அதனை ஏற்றுக்கொள்ளாத இமான், இல்லை எனக்கு சரியாக தெரியவில்லை என்கிறார். மேலும் அக்ஷ்ரா, என்னிடம் நீலாம்பரி போல ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்கிறார். அதற்கு அக்ஷ்ரா, உங்கள் வயதிற்கு நீலாம்பரி போல சொடக்கு போட்டு பேசுவதை எனக்கு சரியாக தெரியவில்லை என கூறும் காட்சிகள் இருந்தது. மேலும் இதனால் மனவருத்தம் அடையும் அக்ஷ்ரா, தனியாக அமர்ந்து அழும் காட்சிகளும் இருந்தது.

மூன்றாவது ப்ரோமோவில், இமான் விமர்சனம் குறித்து ராஜுவிடம், பிரியங்கா பேசி கொண்டிருக்கிறார். அப்போது, இமான் அண்ணாச்சி அப்படி பேசியது மனதை புண்படுத்தும் வகையில் இருந்தது, நான் நேரடியாகவே அண்ணாச்சியிடம், பாராட்ட வேண்டிய இடத்தில் நீங்கள் அக்ஷ்ரா குறித்து அப்படி பேசியது அவர் மனதை கஷ்டப்படுத்திவிட்டது என கூறிவிட்டேன் என்கிறார். அதற்கு ராஜுவும் ஆம், நானும் அதனை கூறி விட்டேன் என்று சொல்லிவிட்டு எழுந்து செல்கிறார். அப்போது பிரியங்கா, இந்த வீட்டில் எது சொன்னாலும் தவறு, சொல்ல வேண்டும் என நினைத்தாலும் தவறு, சொல்லாமல் இருந்தாலும் தவறு என தனியாக புலம்பும் காட்சிகள் உள்ளது. கடந்த சில நாட்களாக இமான் – பிரியங்கா இடையே மோதல் ஏற்பட்டு வரும் நிலையில், இதனால் இன்று பிரச்னை வரும் என எதிர்பாக்கப்படுகிறது.