நேற்று காலை சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மர்ம நபரால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார் சுவாதி என்கிற இளம்பெண். அந்தபெண் பேசுவது போல ஒரு பதிவு.  முகநூலில் “நண்பன் கோபி” (Nanban Gopi)   எழுதியது.

ஸ்வாதி
ஸ்வாதி

“இன்று இறந்துவிட்ட நான் இன்னும் சில நாள் காட்சி ஊடகத்தில் உங்களுடன் வாழத்தான் போகிறேன். அதற்கு முன் உங்களுடன் சிலவற்றை பேசிவிட்டு போய்விட ஆசைபடுகிறேன்.
எல்லோரையும் போல கனவுகளுடன் வாழ்க்கையை ஆரம்பித்த சமகால சமுதயத்தில் நானும் ஒருத்தி தான். எனக்கான கனவுகள் அதிகம் இல்லை. எல்லோரையும் போன்ற நானும் ஒரு சக மனுஷி தான். இன்று நானும் வழக்கம் போல என் அன்றாட வேலைக்கு கிளம்பினேன். வார இறுதிநாட்களை மகிழ்ச்சியுடன் செலவழிக்க நினைக்கும் சராசரி கனவுகளுடன். என் அப்பாவும் அப்படித்தான் நினைத்து என்னை அந்த இரயில் நிலையத்தில் இறக்கிவிட்டுச் சென்றார்.
உங்களில் எத்தனை பேர் இன்று அந்த காட்சியை நேரில் பார்த்தவர்கள் என்று எனக்குத் தெரியவில்லை ஆனால் உங்களின் மனதிற்க்குத் தெரியும். உங்களில் எத்தனை பேர் பெண்கள் முன்னேற்றத்தை வாய்கிழியப் பேசியவர்கள் என்று எனக்கு தெரியாது. இன்று நான் வாய்கிழிபட்டுதான் இறந்தேன். உங்களில் ஒருவருக்கு கூட அதைத் தடுக்க ஆண்மை இல்லையே, வரிஜினிட்டியை ஆண்மையாக என்னும் சமூகத்தில்தானே இன்னும் நீங்கள் வாழ்கிறீர்கள்.
அவனைத் தடுக்காத உங்களின் கயமை கூட எனக்குப் புரிந்தது. ஆனால், அவன் போன பின்பு எனக்கு அடிப்படைச் சிகிச்சை அளிக்கவோ அல்லது என் தாகத்தை போக்க தண்ணி கொடுக்க கூடவா ஆள் இல்லை. இரண்டு மணி நேரம் என்னை வேடிக்கைப் பார்தீர்களே அந்த கணங்கள் கூட உங்களைச் சுடவில்லையா?
de231dd0-6988-4ab8-a132-47209046228e
உங்களின் அதிகபட்ச சமூக அக்கறை, இன்று ஒரு நாள் உங்களின் பேசு பொருள் நான். எப்படியும் இன்னும் இரண்டு-மூன்று நாட்களில் என்னைக் கொன்றவன் எங்கேனும் பிடிபடுவான் இல்லை நீதிமன்றத்தில் சரணைடைவான். என் ஒழுக்கத்தைப் பற்றி ஒரு நீண்டவாதம் பேசுவான். இல்லை என்னால் ஏமாற்றப்பட்டதாக புலம்புவான். அதையும் விவாதப் பொருளாக வைத்து விவாதித்துக் கொண்டே இருங்கள்.
இல்லையேல் ஆளும் வர்க்கம் அவனுக்கு ஒரு தோட்டாவைப் பரிசாக அளித்து அவனைக் கொன்றுவிடும். அதையும் பாராட்டி ஒரு பதிவிட்டு உங்கள் சமூக கடமையை ஆற்றிவிடுங்கள். மிஞ்சிப் போனால் ஒரு கவிஞனின் இறங்கற்பா. ஒரு பேச்சாலனின் தொண்டை நீர்வற்ற ஒரு உரை. ஒரு எழுத்தாளனின் ஒரு பக்க கட்டுரை… இது தானே என் சாவின் எச்சங்கள்.
நான் நானாக இங்கு வீழ்த்தப்படவில்லை.ஒட்டுமொத்த சமூகமாகவே வீழ்த்தப்பட்டு இருக்கிறேன். அதை மறந்துவிடாதீர்கள்.
பெண் பிள்ளைகள் வெளியில் போகும் போது பார்த்து போக சொல்லும் நீங்கள் அதை ஆண் பிள்ளைகளிடம் சொல்லுங்கள். இந்த பெண்களுக்கு எதிரான குற்றங்களை விதையிலே மக்கச்செய்யுங்கள். விருட்சாமாக அதை வளர்த்து பின்பு வெட்டுதல் என்பது உங்களுக்கும் சுலபம் அல்ல. உங்களின் கோடாளிகளுக்கும் சுலபம் அல்ல.
பாரதி சொன்னான் மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம்.அது கடினம் என்று நினைத்து இன்று மாதரையே கொளுத்த முடிவு செய்துவிட்டீர்கள் போல. இறுதியாக ஒன்று வேண்டுகிறேன் கடற்கரை சாலையில் எனக்கும் ஒரு நினைவேந்தல் வைத்து அரசியல் செய்யாதீர்கள்!”