சென்னை: தமிழ்நாட்டில் செயல்படும் சட்ட விரோத மணல் மற்றும் குல் குவாரிகள் அதிகாரிகளின் கூட்டுச் சதியுடன் தொடர்கிறதா? என உயர்நீதிமன்றம் மதுரை கிளை கேள்வி எழுப்பி உள்ளது. இதுகுறித்து, திண்டுக்கல் கலெக்டர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டு உள்ளது.

கனிம வளம் நமது நாட்டின் சொத்து அதை ஒருபோதும் திருடுவதற்கு அனுமதிக்கக்கூடாது. சட்ட விரோத குவாரி முன்பக்க கதவுகள் சீல் வைக்கப்பட்டு, பின்பக்கமாக குவாரிகளில் மணல் அள்ளப்பட்டு வருகிறது, இதை தடுக்க வேண்டியவர்கள் தடுக்காமல் வேடிக்கை பார்க்கின்றனர் என கடுமையாக சாடியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஜெயபால் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் சட்டவிரோத குவாரிகள் குறித்து பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில்,திண்டுக்கல் மாவட்டத்தில் மணல் குவாரிகள் செயல்பட மாவட்ட நிர்வாகம் எந்த ஒரு அனுமதியும் வழங்கவில்லை. ஆனால் பழனி, ஒட்டன்சத்திரம், நத்தம், வேடசந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக ஆற்று மணல் மற்றும் கிராவல் மணல் தினந்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகளில் அள்ளப்பட்டு வருகிறது. இதனால் இந்த பகுதியின் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. மேலும் அரசின் முறையான அனுமதி பெறாமல் சட்ட விரோதமாக மணல் திருட்டில் ஈடுபடுவதால் அரசிற்கு பெரும் வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது.
இதுபோன்று திண்டுக்கல் மாவட்டத்தில் ஏராளமான சட்டவிரோதமாக கனிமவள குவாரிகளை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக திடீர் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதோடு, சட்ட விரோத மணல் குவாரிகளை மூடி சம்பந்தப்பட்ட நபர்கள் மீதும் அதிகாரிகள் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்து வழக்கை கடந்த வாரம் விசாரணை செய்த நீதிபதிகள் சட்டவிரோத குவாரிகளை உடனடியாக மூடி ‘சீல்’ வைக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதும், குவாரி நடத்தியவர்கள் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும், கனிம வளம் நமது நாட்டின் சொத்து அதை ஒருபோதும் திருடுவதற்கு அனுமதிக்கக்கூடாது, அதிகாரிகள் அதற்கு துணை போகக் கூடாது என கடும் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த நிலையில் வழக்கு மீண்டும் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், மரிய கிளாட் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சம்பந்தப்பட்ட குவாரிகள் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது என்றும், சட்டவிரோத குவாரிகள் நடத்தியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சட்ட விரோத குவாரி முன்பக்க கதவுகள் சீல் வைக்கப்பட்டு, பின்பக்கமாக குவாரிகளில் மணல் அள்ளப்பட்டு வருகிறது என்பதற்கான புகைப்படங்களை நீதிபதியிடம் தாக்கல் செய்தார்.
இதை பார்த்து கோபமடைந்த நீதிபதிகள், இதுபோன்ற நடவடிக்கைகள் அதிகாரிகளின் கூட்டுச் சதியுடன் தொடர்கிறதா அல்லது வேறுவிதமாக நடக்கின்றனவா? என கேள்வி எழுப்பினார்கள். அதிகாரிகளின் இவ்வாறான செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது. இந்த குற்றச்சாட்டுகள் கடுமையானவை என்பதால், திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் இந்த நீதிமன்றத்தில் ஆஜராகி, உண்மைகளை விளக்கி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
எனவே வரும் 16.07.2025 அன்று காலை 10.30 மணிக்கு நீதிமன்றத்தில் மாவட்ட கலெக்டர் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.