சென்னை:  தமிழ்நாட்டில், குற்றவாளிகள் மட்டும் வழுக்கி விழுவது எப்படி?  என கேள்வி எழுப்பிய  சென்னை உயர் நீதிமன்றம் குற்றவாளிகள் வழுக்கி விழுந்தால் சம்பந்தப்பட்ட காவலர்கள் பணியை இழக்கும் நிலை ஏற்படும் என எச்சரித்துள்ளது.

தமிழ்நாட்டில் குற்றவாளிகளுக்கு மாவு கட்டு போடப்படுவதும், இதற்கு காரணம், அவர்கள்  கழிவறைகளில் வழுக்கி விழுவதாகவும் காவல்துறையினர் கூறி வருகின்றனர். இது கடுமையான விமர்சனங்களை ஏற்பாடுத்தி உள்ளது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்,  தமிழக காவல் நிலைய கழிவறைகள் குற்றவாளிகள் மட்டும் வழுக்கி விழும் வகையில் உள்ளதா?  என கேள்வி எழுப்பியதுடன்,   குற்றவாளிகள் வழுக்கி விழுந்தால் சம்பந்தப்பட்ட காவலர்கள் பணியை இழக்கும் நிலை ஏற்படும் என எச்சரித்துள்ளது.

 காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஜாகிர் உசேன் என்பவர் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட நிலையில், அவரது  கை, கால் முறிவுக்கு சிகிச்சை வழங்கக் கோரி, அவரது தந்தை இப்ராஹிம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரயை சென்னை உயர்நீதிமன்ற , நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் வி.லட்சுமி நாராயணன் அமர்வில்  விசாரிக்கப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணையைத் தொடர்ந்து, கருத்து தெரிவித்த  நீதிபதிகள், ‘கைது செய்யப்பட்ட நபருக்கு எவ்வாறு காயம் ஏற்பட்டது?’ என அரசு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த அரசு வழக்கறிஞர், ‘கழிவறையில் வழுக்கி விழுந்ததால் காயம் ஏற்பட்டது. அவருக்கு உரிய சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது’ என்றார். இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், தமிழ்நாட்டில்தான் இதுபோன்ற வழுக்கி விழும் சம்பவங்கள் இருப்பதாக கடுமையாக சாடியது,

பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், காவல் நிலையங்களில் உள்ள கழிவறைகள் குற்றவாளிகள் மட்டும் வழுக்கி விழுந்து காயம் ஏற்படும் வகையில் உள்ளதா? அந்த கழிவறைகளை ஆய்வாளர்கள் பயன்படுத்துவதில்லையா? அவர்களுக்கு எதுவும் ஆவதில்லையே, ஏன்? என்று கேள்வி எழுப்பியதுடன், காவல்துறையினர்,   இதுபோன்ற செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என கூறியது.

மேலும், இனிமேலும் இதுபோன்ற சம்பவங்கள்  தொடர்ந்தார்,   சம்பந்தப்பட்ட காவலர்கள் பணியை இழக்கும் நிலை ஏற்படும் என்று கூறினர்.

மேலும், பாதிக்கப்பட்ட மனுதாரரின் மகனுக்கு, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை வழங்க சிறைத்துறைக்கு உத்தரவிட்டு வழக்கு முடித்து வைக்கப்படுகிறது.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.