டில்லி:

ஏஎஸ், ஐபிஎஸ் போன்ற உயர் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் தங்கள் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது.

அதிகாரிகள் தங்களது அசையும் மற்றும்  அசையா சொத்து விவரங்களை தாக்கல் செய்யாவிடில்  பதவி உயர்வு உள்ளிட்ட சலுகைகள் எதுவும் வழங்கப்படமாட்டாது என்றும்  மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாட்டில் மொத்தமுள்ள ஐஏஎஸ் மற்றும் ஐ.பி.எஸ்.,அதிகாரிகளில் 15 சதவிகிதம் பேர் மட்டுமே இதுவரை தங்களது சொத்து விவரங்களை தெரிவித்துள்ளனர் என்றும் மீதமுள்ள 85 சதவிகிதம் பேர் இதுவரை எந்தவொரு விவரங்களையும் தாக்கல் செய்யவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

அதிலு, ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் சொத்துவிவரங்களை சேகரித்து அனுப்பும்படியும், தகவல்கள் அளிக்காத அதிகாரிகளின் பதவி உயர்வு மற்றும் சலுகைகள் தரப்படாது என்றும் கூறியுள்ளது.

ஏற்கனவே கடந்த 31ம் தேதிக்குள் தங்களது சொத்துவிவரங்களை தெரிவிக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. ஆனால், இதுவரை பெரும்பாலான அதிகாரிகள் தகவல்களை தெரிவிக்காததை தொடர்ந்து தற்போது இந்த அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.